மதுரை அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் தனிமம் எடுப்பதற்கான திட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததையடுத்து, அப்பகுதி மக்களை இன்று முதலமைச்சர் நேரில் சந்தித்தார். இந்நிலையில், டங்ஸ்டன் எடுப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 11, 608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் திரும்ப பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அரிட்டாபட்டி டங்ஸ்டன்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழ்நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் மேலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பாரம்பரிய சின்னங்கள், இயற்கை வளங்கள், பல்லுயிர் தளங்கள் மற்றும் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என எதிர்ப்புகள் எழ ஆரம்பித்தன. 

வழக்குகள் வாபஸ்:

இதையடுத்து, அப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் போரட்டம் நடத்தியவர்கள் மீது மதுரை தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன. 

இந்நிலையில், டங்ஸ்டன் எடுப்பதற்கு எதிரான போரட்டத்தில் ஈடுபட்ட 11, 608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் திரும்ப பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். 

டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். “சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேள்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார். 

Also Read: TN Weather: இன்னும் போகலையா.! கடைசியா, 5 மாவட்டங்களில் கனமழை கொட்டிவிட்டு போகும் வடகிழக்கு பருவமழை

அரிட்டாபட்டியில் பாராட்டு விழா:

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் , டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அப்போது, சுரங்கம் அமைந்தால், நான் பதவியிலும் இருக்க மாட்டேன் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் , தமிழ்நாட்டில் உள்ள அதிமுக, விசிக , காங்கிரஸ், தவெக, நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் , பாஜக மாநில தலைவரும், சுரங்கம் அமைக்க வேண்டாம் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என கூறினார். 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக, மத்திய அரசு அறிவித்தது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து , நேற்றைய தினம் டங்ஸ்டன் எதிர்ப்பு குழுவினர் , நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  இதையடுத்து, இன்று அரசு சார்பில் அரிட்டாபட்டியில் நடைபெறும் பாராட்டு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்நிலையில்  , டங்ஸ்டன் போராட்ட குழுவினர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது, அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் , இன்று அரிட்டாபட்டிக்குச் சென்று , அங்குள்ள மக்களை சந்தித்து, பாராட்டு விழாவில் பங்கேற்றார்.