திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியபட்டி பால்ஸ்நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் 10ஆம் வகுப்பு படிக்கும்  16 வயது மகன் வீரஹரிஷ்குமார், வில்லியம் என்பவரின் 9ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது மகன் எழில் ரிச்சர்டு. இவர்கள் இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால்  அப்பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மீன் பிடிப்பதற்காக ரெட்டியபட்டி கன்னிமார் கோவில் அருகே உள்ள குளத்துக்கு சென்றுள்ளனர். 



குளத்துக்குள் தண்ணீர் தேங்கி கிடக்கும் இடத்துக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த மண்திட்டில் நின்றபடி தண்ணீருக்குள் தூண்டிலை போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் வீரஹரிஷ்குமார், எழில் ரிச்சர்டு ஆகியோரின் தூண்டில்களில் மீன்கள் சிக்கவே உற்சாகத்தில் துள்ளிக்குதித்த 2 பேரும் தூண்டிலை வெளியே எடுக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் தண்ணீருக்குள் தவறி விழுந்தனர்.  குளத்துப்பகுதியில் சேறும், சகதியுமாக இருந்ததால் சிறுவர்களால் எழுந்து நிற்க முடியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப்பார்த்த சக நண்பர்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் மூழ்கி கிடந்த 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 




இது தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கும், திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கும், தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு வந்த சிறுவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மயக்க நிலையில் கிடந்த 2 பேரையும் கண்டு செய்வதறியாது தவித்தனர். 




பின்னர் ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என்று கருதிய அவர்கள், சிறுவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே 2 மாணவர்களும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலாண்டி, சார்பு ஆய்வாளர் விஜய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதேபோல் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசப்பிள்ளைபட்டியை சேர்ந்தவர் கருப்பணன். அவருடைய மகன் தங்கபாண்டி (20). இவர், மதுரை சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.பொங்கல் பண்டிகையையொட்டி இவர் தனது குடும்பத்தினருடன், திண்டுக்கல் அருகே வாழைக்காய்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். தங்கப்பாண்டி, அவரது உறவினர்களுடன் அந்த பகுதியில் உள்ள தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க சென்றுள்ளார்.




அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தங்கப்பாண்டி திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தங்கபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளம், தடுப்பணையின் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண