தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலத்தை அதிகாரிகள் துணையுடன் பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க.வினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.



பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்களை அரசு அதிகாரிகள் துணையுடன் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட தனிநபர்கள் சிலர் அபகரித்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் ஆர்.டி.ஓ.க்கள் 2 பேர் உள்பட 14 பேர் மீது தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், பெரியகுளம் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், நில அளவையர் பிச்சைமணி, பெரியகுளம் மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் அழகர் ஆகிய 3 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக இருந்தனர் அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.



மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெரியகுளம் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றிய மோகன்ராம் (வயது 41), நில அளவையர் சக்திவேல் (42) ஆகிய 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர்களோடு சக்திவேல் தனது அலுவலகத்தில் அரசு சாராத உதவியாளராக பணியில் ஈடுபடுத்திய செல்வராஜ் (36) என்பவரையும் போலீசார் பிடித்தனர். அவர்கள் 3 பேரையும் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு போலீசார் கைது செய்திருந்தனர்.



இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சிபிசிஐடி போலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் ஏற்கனவே இதுவரை 6 நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது நிலமோசடி நடைபெற்ற காலகட்டத்தில் பெரியகுளம் வட்டாட்சியராக பணிபுரிந்த கிருஷ்ணகுமார் என்பவரை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண