கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில்  பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளது வனத்துறை.




தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. மேலும் கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் இரவு 11 மணி வரை விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் நள்ளிரவு முதல்  நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.




எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மழைப்பொழிவு குறைந்து அருவிக்கு வரும் நீரின் அளவு சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அதேபோல் மஞ்சளார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர் வரத்து 50 கன அடியாக அதிகரித்து அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 50 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் அவ்வப்போது பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 42 அடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அதன் முழு கொள்ளளவான  57 அடியில் 55 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே மஞ்சளார் ஆற்றில் திறந்து விடப்பட்டது.




இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை  அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில்  பெய்த மழையால் அணைக்கு நீர் வரத்து 50 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து  மஞ்சளார் அணையில் இருந்து அணைக்கு வரும் 50 கன அடி உபரி நீரை மஞ்சளார் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் நீரை நிறைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.




மீண்டும் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மஞ்சளார் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். தற்பொழுது அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து  50 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது அணையில் நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையில் 4 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.