முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்கவும் பராமரிக்கவும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் தலைமையில் மூவர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. பின்னர் இந்த குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்பு குழுவினர் பருவ மழை காலங்களில் அணை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்வர். அதன்படி தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 136 அடியை எட்டியது. இந்நிலையில் மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் சரவணகுமார் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.



இதில் தமிழகத்தின் பிரதிநிதிகளான பெரியார் கோட்ட சிறப்பு செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரளாவின் பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஹரிகுமார் மற்றும் உதவி பொறியாளர் பிரஷீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்காக காலை தேக்கடியில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவின் படகு துறையின் இரு படகுகள் மூலம் அணை பகுதிக்கு புறப்பட்டு சென்றனர்.



இதில் பிரதான அணை, பேபி அணை, நீர்வரத்து, நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் மற்றும் நீர் கசிவு, ஷட்டர் இயக்கங்கள், கேலரி பகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து மாலையில் குமுளியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை மேல்மட்ட கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்ட முடிவில், அணையின் சுரங்கப்பகுதியில் இருந்து வெளியேறும் கசிவு நீரின் அளவானது நிமிடத்திற்கு 115 லிட்டராக இருந்தது.


அணை நீர்மட்டத்திற்கு ஏற்றார்போல் கசிவு நீர் அளவு உள்ளதால் அணை பலமாக இருப்பது மூலம் உறுதி செய்யப்பட்டது. அணையின் 13 மதகுகளில் இரண்டு, ஐந்து, ஒன்பது ஆகிய மூன்று மதகுகளின் இயக்கம் சரிபார்க்கப்பட்டது. மதகுகள் இயக்கம் சீராக இருப்பது கண்டறியப்பட்டது. இனி வரும் நாட்கள் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் காலம் என்பதால் பருவமழை காலங்களில் அணையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.



"ரூல் கர்வ்" அட்டவணைப்படி அணையில் ஜூலை 20-ஆம் தேதி வரை அணையின் நீர்மட்டம் 136.60 அடியாக நிலை நிறுத்த வேண்டும் என்றுள்ளதால் "ரூல் கர்வ்" அட்டவணையை அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து மேல்மட்ட கண்காணிப்பு குழு முடிவெடுக்க ஏதுவாக, முல்லைப்பெரியாறு அணையின் தற்போதைய முழு நிலவரம் குறித்த தகவல் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. அணையின் ஆய்வறிக்கை மற்றும் கூட்டம் முடிவுகள் நீர்வள ஆணைய தலைமை பொறியாளரும் மேல்மட்ட கண்காணிப்பு குழு தலைவருமான குல்சன் ராஜ்ஜிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண