தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது அகமலை ஊராட்சியில் ஊரடி  ஊத்துக்காடு, கருங்கல் பாறை, குறவன்குளி, உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் சாலை வசதியின்றி தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் மலைப்பகுதிகளில் விளையும் விவசாய விளைபொருட்களை குதிரைகள் மூலமாக கொண்டு செல்வர். கடந்த 40 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்கள், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  தமிழக அரசு சோத்துப்பாறை அணை பகுதியிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை புதிதாக சாலை அமைப்பதற்கு முதற்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 29.88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.



இந்நிலையில்  JCB இயந்திரம் மூலம் பணிகள் துவங்க இருந்த நிலையில் வனத்துறையினர் கடந்த 4 மாதங்களாக சாலை அமைக்கு பணிகளுக்கு தடை விதித்து வருவதால் சாலை அமைக்கு பணியை தடுத்து நிறுத்திய வனத்துறையினரை கண்டித்து சோத்துபாறை அணை, பெரியகுளம் சாலையில் சாலை மறியில் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நிலையில், உதவி வனப்பாதுகாப்பு அதிகாரி மகேந்திரனிடம் மலை கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை அமைக்க அனுமதிக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மலை கிராம மக்கள் சாலையில் சமையல் செய்து உணவு உண்ணும் போராட்டத்தை தொடர்ந்தனர்.




இதனை அடுத்து அங்கு வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் சாலை அமைக்கும் பணியை துவக்க உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை அனுமதிக்க உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சென்ற நிலையில். தேனி மாவட்ட வன அலுவலர் வித்தியா  பெரியகுளம் வனசரக அதிகாரி சாந்தக்குமார் மற்றும் அகமலை ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட கிராம மக்களுடன் சாலை அமைய உள்ள இடங்களை ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஆய்வை முடித்து சோத்துபாறை அணைப்பகுதிக்கு வந்த மாவட்ட வன அலுவரை பழங்குடியின மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு தங்களுக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டி கை கூப்பி வேண்டுகோள் வைத்து கோரிக்கை விடுத்தனர்.




மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு, ராயப்பன்பட்டி, அகமலை உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள மலை கிராம மக்களின் 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஊராட்சி அமைப்புகளில் முறையாக நிதி ஒதுக்கீடு செய்து புதிதாக சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறையினர் தடைவிதித்து முட்டுக்கடை போட்டு வருவதால் வனத்துறையினருக்கும், மலை கிராம மக்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.


 


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!


 


புலிகள் சரணாலயமான மேகமலை வனப்பகுதி - வெளியேற்றப்படும் 39 கிராம மக்கள்...!