கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட திமுக சார்பில் குமுளியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேரளவாழ் தமிழக மக்கள் மற்றும் மாணவ ,மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், பெரியாரின் வைக்கம் போராட்டத்திற்கு பிறகு கேரள மக்களுக்கும், திமுகவினருக்குமான தொடர்பு, மிகப்பெரியதாக இருக்கிறது. கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் கேரளாவில் உள்ள பெரும்பாலான மக்களின் பாராட்டுக்களுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.




தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களின் வளத்தை பெருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட வேண்டும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சுமூக தீர்வு காண்பார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி மதவாதத்தை பேசும் பாஜக, ஜாதிப்பிரிவினையை பேசும் பாமக ஆகிய கட்சிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பித்துள்ளது. இது தவிர இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் இடைத்தேர்தலில் 13 இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து சட்டமன்றத் இடைத்தேர்தலில் பாஜக சரிவுகளை சந்தித்து வருவது அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.


ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது என்பது,காவல்துறை எடுத்து நடவடிக்கை.‌ சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்க்காது.


பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற திராவிட தலைவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பேசி வருவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  தலைவர்கள் குறித்து அவதூறு பேசி காவல்துறையின் வழக்குகள் மூலம் விளம்பரம் தேடலாம் என சீமான் நினைக்கிறாரா? இதுவரை பல தேர்தல்களை சந்தித்த சீமான் எதிலாவது டெபாசிட் வாங்க முடிந்ததா, முதலில் போட்டியிடும் தேர்தலில் டெபாசிட் வாங்கிய பிறகு தலைவர்கள் குறித்து அவர் பேசட்டும்.




இளைஞர்கள் கருத்தியல் ரீதியாக அரசியலை அனுக வேண்டும்.‌ உணர்வுப்பூர்வமாக அனுகக் கூடாது. விடுதலைப் புலிகள், ஈழத்தமிழர் குறித்து பேசி இளைஞர்களின் உணர்வுடன் சீமான் விளையாடுகிறார். இளைஞர்கள் வரலாறு படிக்க வேண்டும்.‌


பெரியார் குறித்து அவதூறு பேசும் சீமான், பெரியார் இல்லையென்றால் இன்றைக்கு கோவணம் தான் கட்டிக் கொண்டிருக்க முடியும். இலங்கை வரலாறை கற்றுக் கொள்ளும் முன் தமிழ்நாடு வரலாறு மற்றும் தமிழ் சமூகம் குறித்து  முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் சீமான் பின்னால் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.‌