வடமாநில வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரம்  கேள்விக்குறியாகிவிட்டது. உள்ளூர் தொழிலாளர்களை பாதுகாக்க கோரி மதுரை செல்போன் ரிப்பேர் அசோசியேஷன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மதுரை மாநகர் மேலபெருமாள் மேஸ்திரி வீதி, கிளாஸ்கார தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் செல்போன் உதிரிபாகம் விற்கும் மொத்த விற்பனை  கடைகளை வைத்து 400க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் விற்பனை செய்துவருகின்றனர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள்  அதே பகுதிகளில் சில்லறை விற்பனை மற்றும் ரிப்பேர் சர்வீஸ் தொழில்களில்  ஈடுபட்டு வருகின்றனர். 
இதனிடையே தற்போது பொதுமக்களுக்கு வடமாநில வியாபாரிகள் நேரடியாக மொத்த விலைக்கே உதிரிபாகங்களுக்கு  பில் இன்றி, வாரண்டி இன்றி விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம்  நியூ தென்மதுரை செல்போன் ரிப்பேர் அசோசியேசன் சார்பில் செல்போன் உதிரி பாகங்கள் சில்லறை விற்பனையாளர்கள் மனு அளித்தனர்.
 
வடமாநில வியாபாரிகள் உள்ளூர் வியாபாரிகளின் வியாபாரத்தை குறைப்பதற்காகவே பில் இன்றி குறைந்த விலைக்கு பொதுமக்களிடம் விற்பனை செய்துவிட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளூர் வியாபாரிகள் மீதான தவறான எண்ணத்தை உருவாக்கிவிட்டு மோதலில் ஈடுபட வைப்பதாகவும் குற்றம்சாட்டினர். வடமாநிலத்தவர்களின் தலையீட்டால் பொதுமக்கள் உள்ளூர் வியாபாரிகள் இடையே மோதல் ஏற்பட்டு வியாபாரமும் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், வடமாநிலத்தவர்கள் சில்லறை வியாபாரம் செய்துவருவதால் உள்ளூர் வியாபாரிகளின் தமிழர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகிவுள்ளதாக தெரிவித்தனர்.