திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000 க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனங்களில் ஒரிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு அதிக எண்ணிக்கையில் தமிழ் பின்னலாடை தொழிலாளர்கள் விட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.


இந்த நிலையில் அனுப்பர்பாளையம் - வேலம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழக தொழிலாளர் ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி பெல்ட், கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. வட மாநில தொழிலாளர்கள், தமிழ் தொழிலாளர்களை தாக்குவது குறித்து தகவல் அறிந்த வேலம்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பெட்டிக் கடையில் சிகரெட் புகைக்கும் போது, வட மாநில தொழிலர்களுக்கும், தமிழக தொழிலாளர் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து வட மாநில தொழிலாளர், தன்னுடன் வேலை செய்யும் சக வட மாநிலத்தவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தாக்க வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் வேலம்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது தொடர்பாக காவல் துறையினர் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், 'வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திலகர் நகரில் உள்ள ரியா பேஷன்ஸ் என்ற கம்பெனியில் வேலை செய்யும் நபர் கடந்த 14 ம் தேதியன்று டீ குடிக்க சென்ற போது, அங்கு அமர்ந்திருந்த இரண்டு நபர்கள் சிகரெட் பிடிக்கும் புகைபட்டதில் அவர்களுக்குள் சிறிய பிரச்சனை ஏற்பட்டு, அங்கு இருந்த நபர் ரியா ஃபேஷனில் வேலை செய்யும் நபரை தாக்க முற்பட்டுள்ளார்.


அதன் காரணமாக அந்த நபர் தன்னுடன் வேலை செய்யும் தனது நண்பர்களை அழைத்து வந்த போது, இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலைந்து சென்று விட்டதாகவும், எந்த தரப்பிற்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இது சம்மந்தமாக யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.


இது தொழில் போட்டியோ, வேலை வாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது முன்விரோதம் காரணமாகவோ ஏற்பட்ட பிரச்சனை இல்லை என்றும், தற்செயலாக இரண்டு நபர் மற்றும் அவர்களது நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையே என தெரியவருகிறது. இருப்பினும் இது சம்மந்தமாக முழுமையாக விசாரணை செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 14 ம் தேதியன்று நடந்து முடிந்த நிகழ்வை 26 ம் தேதியன்று நடைபெற்றதாகவும், பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தமிழர்களை வட இந்தியர்கள் விரட்டுவதாக சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண