மதுரை தெப்பக்குளம் பகுதியில் Smoke biscuit திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் ரத்து செய்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களில் உறைதல் பணியினை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது.


மேலும் திரவ நைட்ரஜன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவு பொருட்கள் தரம் மற்றும் உணவு சேர்க்கைகள்) ஒழுங்குமுறை, 2011 இன் படி Packing Gas மற்றும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த முடியும்.


எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006, பிரிவு 38(10)-ன்படி உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006-ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.



உணவு பாதுகாப்புத் துறை


 

சில நாட்களுக்கு முன்பாக ஹைதராபாத் சிறுவன் ஒருவன் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட உடன் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது,

ஸ்மோக் பிஸ்கட்டை(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் மதுரை முழுவதும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

விளம்பர ஸ்டிக்கர்களை அகற்றம்


 

அதன்படி, நேற்று மாலை மதுரை தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவு கடைகளை மதுரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் ஸ்மோக் பிஸ்கட் (Smok biscuit)  கடையின் உணவு பாதுகாப்பு பதிவு  சான்றிதழை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடை சுற்றியும் ஒட்டப்பட்டுள்ள விளம்பர ஸ்டிக்கர்களை அகற்றப்பட்டு உரிமையாளருக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.