திருமங்கலம் தொகுதி கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் வினோத்குமார் மற்றும் அன்பரசன் உள்ளிட்ட ஆறு பேர் திருவேடகம் அருகே உள்ள வைகை  ஆற்றில் குளிக்க சென்றனர். இதில் வினோத்குமார், அன்பரசன் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் அன்பரசன் மட்டும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். காணாமல் போன வினோத்குமார் உடலை தேடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தீயணைப்பு துறைகளால் வைகை ஆற்றில் தேடப்பட்டு வரும் இடத்தினை நேரில் வந்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து தீயணைப்பு துறை அதிகாரி இடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் நிலைமையை கேட்டறிந்தார். தொடர்ந்து ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார், செய்தியாளர்களிடம் பேசியதாவது:




 



மதுரை, தேனி ஆகிய பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைப் பெரியாறு இருந்து தண்ணீர் மற்றும் மழை நீர் வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தீர்ப்பினை பெற்று தந்தார்கள். தற்போது ரூல்கர்வ் கடைபிடித்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தான் முல்லைப் பெரியாறு குறித்து முதலமைச்சர் நீண்டநாள் கழித்து விளக்கம் அளித்து உள்ளார். 5 மாவட்ட விவசாயிகளின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடியார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மக்களுக்காக திட்டங்களே தவிர திட்டத்திற்கான மக்கள் என்பது கூடாது, ஆகவே முல்லை பெரியார் விவகாரத்தில் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்



தற்போது வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு பேரில் இருவர் தண்ணீரில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார். மற்றொருவரை தேடி வருகின்றனர். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ராணுவப் பணியை முடித்துக் கொண்டு விடுப்பில் தன் வீட்டுக்கு கூட செல்லாமல் நண்பருடன் சேர்ந்து ஆற்றில் குளித்த போது அடித்துச் செல்லப்பட்டது வேதனை கவலை அளிக்கிறது. நாட்டை காக்கும் ராணுவ வீரர் எப்படியாவது உயிரோடு இருக்க வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறோம். இது போன்ற மழைக் காலங்களில் ஆற்றில் குளிக்க கூடாது. ஆடு மாடுகளை குளிப்பாட்ட கூடாது. துணிமணிகள் துவைக்கக் கூடாது. இதைத் தான் கடந்த ஆட்சிக்கு ஏற்பட்ட அனுபவத்தை அரசுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.


 




பொதுவாக தென்மேற்கு பருவமழை என்பது அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு வரும். ஆனால், வட கிழக்கு பருவமழை என்பது முழுக்க முழுக்க தமிழகத்துக்கு மட்டுமே வரும். இதில் பெய்யும் 49 சதவீதம் மழை குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும். ஏற்கனவே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், மழைக்காலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் காவிரி ஆற்றை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார். பேரிடர் காலங்களை மூன்று நிலையாக கடந்த ஆட்சி காலத்தில்  கடைபிடிக்கப்பட்டது, குறிப்பாக வெள்ளம் வருவதற்கு முன்பாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், அதை எடுக்க திமுக அரசு தவறியதால் தான், இன்றைக்கு மேட்டூரில் 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதே போன்ற சூழ்நிலை வைகை அணையில் உள்ளது. இந்த திமுக அரசு பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்க தவறி விட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது.


 




மதுரையில் சில நாட்களுக்கு முன்பாக கனமழையால் நான்கு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுவரை அவர்களுக்கு எந்த நிவாரண உதவியும் கொடுக்கவில்லை. இது போன்ற காலங்களில் அம்மாவின் ஆட்சியில் எடப்பாடியார் 10 லட்சம் வரை  உயிரிழந்த குடும்பங்களுக்கு கொடுத்தார். அதேபோல் மீனவர்களுக்கு 20 லட்சம் வரை கொடுத்தார், மேலும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்கள், காப்பீட்டு தொகைகள், இடுபொருள்கள் போன்றவற்றை உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் தற்போது பழனி, காங்கேயம், தர்மபுரி போன்ற  மாவட்டங்களுக்கு செல்கிறார். போகும் வழியெல்லாம் மக்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எடப்பாடியார் வரும்பொழுது தொண்டர்கள்  திரண்டு வருகிறார்கள். ஆனால் சிலர் தென் மாவட்டத்திற்கு வருகை தரும் போது அறிவிப்பு தருகின்றனர். இருப்பினும் எதிர்பார்த்த கூட்டம் இல்லாததால் அவர்களுக்கு தோல்வி அடைந்துள்ளது. ஆகவே இன்றைக்கு கட்சியும், கழகத் தொண்டர்களும் எடப்பாடியார் பக்கம் தான் உள்ளார்கள் என்று கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண