மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு மூன்று ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

 

உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா இரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை இரயில் நிலையத்தில்  நேற்று (26-8-2023) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

 

அதிகாலை 5.15 மணியளவில் ரயிலில் தீப்பிடித்துள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் சிலிண்டர் பயன்படுத்தி சமைத்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்து பயங்கர தீ பிடித்துள்ளது. தீ மளமளவெனப் பரவ ரயில் பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். 55 பேர் உயிர் தப்பியுள்ளனர். விபத்தில் காயமடைந்த 8 நபர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் ஒன்பது நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

 




 

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தடய அறிவியல் துறையின் பேராசியர்கள் சந்திரசேகரன் மற்றும் சதாசிவம் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு தலைமையில் சிகிச்சைகளும் பலியானவர்களின் 9 உடல்களையும் பிரேத பரிசோதனையும் செய்தனர். தீ விபத்தில்  பலியானவர்களின் உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் இருந்ததால் உடலை அடையாளம் காணுவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது அதன் பின் அவர்களின் ஆதார், டிக்கெட் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டது. சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து மேலும் (Embalming) செய்த பின் மதுரையில் இருந்து சென்னைக்கு வண்டிக்கு மூன்று உடல்கள் வீதம் 3 ஆம்புலன்ஸ் மூலம் ஒன்பது பேரின் உடல் ஆனது சென்னைக்கு கொண்டு செல்லப்பட‌   IRCTC ஏற்பாடு செய்திருந்தது.



 

ரயில் தீ விபத்தில் இறந்த 9 பேரின் உடலுக்கு அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் பி.மூர்த்தி,  மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மருத்துவமனை முதல்வர் டாக்டர்.ரத்தினவேல் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர், அதன்பின் உடல் ஆனது மதுரையில் இருந்து இரவு 11 மணி அளவில் 3 இலவச அமரர் உதவி மூலமாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு இருந்து விமானத்தில் லக்னோ செல்கிறது.

 

முதல் கட்டமாக 9 உடல்கள் கொண்டு செல்லப்படக்கூடிய ஆம்புலன்ஸ் உடன் தனி வாகனத்தில் நான்கு ரயில்வே போலீசாருடன் 14 உறவினர்கள்  என மொத்தம் 18 நபர்கள் செல்ல உள்ளனர். மீதமுள்ள 28 நபர்கள் ஏற்கனவே மதுரை ரயில் நிலையம் அருகே இருக்கக்கூடிய தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் அவர்களும் சென்னை நோக்கி வாகனத்தில் புறப்பட்டனர். சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் புறப்படக்கூடிய விமானத்தில் செல்கின்றனர்.