மதுரையில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் முழு தோல்வியை காரணம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


மதுரை ரயில் விபத்து:


அப்போது அவர் கூறும் போது மதுரையில் இன்று நடைபெற்ற ரயில்வே விபத்தில் ஒன்பது பேர் இறந்துள்ளனர். 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே துறையும், மாநில அரசும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன. இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். 






தீப்பிடிக்க கூடிய எந்த பொருளையும் ரயிலில் கொண்டு செல்லக்கூடாது. ஆனால் கேஸ் சிலிண்டர்களோடு கடந்த பத்து நாட்களாக ஒரு பயணிகள் பெட்டி தென்னிந்தியா நெடுக பயணித்திருக்கிறது. எந்த ரயில் நிலையத்திலும் அந்த பெட்டி ஆய்வு செய்யப்படவில்லை. இந்த விபத்து மிகுந்த வேதனையாக உள்ளது.


ரயில்வே பாதுகாப்பு துறை:


இந்த விபத்து ரயில் பயணத்தின் பொழுது நிகழ்ந்திருந்தால் எவ்வளவு பெரிய விபத்தாக மாறி இருக்கும், ரயில் நிலையத்திற்கு வந்த பிறகு நடந்துள்ளது. இதுவே ரயில் வந்து கொண்டிருக்கும்போது நடந்திருந்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு விபத்தில் சேதம் இருந்திருக்கும். இதற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே முழுக்காரணம்.  




ரயில்வே பாதுகாப்புத் துறையை பலப்படுத்த வேண்டும். 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப வேண்டும். பெண்களுக்கான பெட்டிகளில் போதிய பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்பதற்காக பொது பெட்டிகளின் நடுவில் பெண்களுக்கான பெட்டிகளை இணைக்கிறோம் என்று ரயில்வே அதிகாரி அறிக்கை விட்டார். அவ்வளவு பாதுகாப்பு படையினர் இடங்கள் காலியாக உள்ளன.


போதிய பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இல்லை. கொள்கையும் இல்லை, சுற்றுலா பயணிகள் பயணிக்கின்ற பெட்டிகளை பாதுகாப்பு சோதனைகள் இடுவது சம்பந்தமாக தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. அதேபோல் ரயில் பெட்டிகளுக்குள் தீயணைப்பு கருவி ஏசி பெட்டிகளுக்கு மட்டுமே உள்ளது.




தீயணைப்பு கருவிகள் இல்லை:


ஏசி அல்லாதபெட்டிகளில் தீயணைப்பு  கருவிகள் இல்லை. சுற்றுலா பயணிகளில் கம்பார்ட்மெண்டில் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். ரயில்வே நிர்வாகம் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து அலட்சிய போக்கு கடைப்பிடித்து வருகிறது. சமீபத்தில் இரு பெரும் விபத்துக்களை சந்தித்து விட்டது. இருசக்கர வாகனத்தை ரயில் பெட்டியில் பார்சல் அனுப்ப வேண்டும் என்றாலே அந்த வாகனத்தில் ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாமல் இருந்தால்தான் பார்சலுக்கே அனுமதிப்பார்கள். 


அதேபோல ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் கேஸ் அடுப்பு பயன்படுத்த கூடாது, மின்சார அடுப்பு தான் பயண்படுத்த வேண்டும் என்பதே விதி. ஆனால் 10 நாட்கள் கேஸ் சிலிண்டரோடு தீ பிடிக்கும் பொருட்களோடு பாதி இந்தியாவை பல்வேறு ரயில் நிலையங்களில் வழியாக கடந்து வந்துள்ளது. ஆனால் எங்கும் சோதனை செய்யப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Tourist Train Fire Accident : மதுரையில் சுற்றுலா ரயிலில் பயங்கர தீ விபத்து 9 பேர் உயிரிழப்பு ? காரணம் என்ன..? தீவிர விசாரணை..!