ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கழுத்து மணி, சந்தனம், குங்குமம் அணிவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கோரி கழுத்தில் மணிகளை  அணிந்தவாறு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய காளை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஜல்லிக்கட்டு போட்டிகள்:

 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக நடைபெறும்.  குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது.


 




 

சந்தனம், குங்குமம், மணி:

 

ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில்  2023ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

 

மதுரையில் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 15ம் தேதியும், பாலமேடு ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் காளைகளை வாடிவாசல்களில் அவிழ்த்து விடப்படும் போது காளைகளை உரிய மரியாதையோடு சந்தனம், குங்குமம், கழுத்து மணிகளோடு அவிழ்த்து விட அனுமதி அளிக்க கோரி தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.




 

நூதன ஆர்ப்பாட்டம்:

 

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளுக்கு பாரம்பரிய முறைப்படி கழுத்துமணி, சந்தனம், விபூதி, குங்குமம் அணிவதற்கு அனுமதி அளிக்க கோரி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தினர் அதன் தலைவர் முடக்காத்தான் மணி தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள்  காளைகளுக்கு கழுத்தில் அணிவிக்கப்படும் மணிகளை தங்களது கழுத்தில் அணிந்தவாறும், மஞ்சள், குங்குமத்தினை கைகளில் ஏந்திவந்தபடியும் நூதன முறையில் மதுரை ஆட்சியர் அலுவலகம் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நிறைவேற்ற கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின்னர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.



 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சிமைய தலைவர் முடக்காத்தான் மணி..,”பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு காளைகளை தெய்வத்திற்கு ஈடாக வீடுகளில் வளர்த்து வரும் நிலையில் வாடிவாசல்களில் அதிகாரிகள் சந்தனம், குங்கமத்தை அழிப்பதாகவும், கழுத்து மணிகளை கழற்றி விடுவதாகவும், பாரம்பரியத்தை அழிக்க நினைத்தால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனவும்,  பாரம்பரிய முறைப்படி சந்தனம், குங்குமம், கழுத்து மணிகளோடு காளைகளை அவிழ்த்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.