ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 300க்கும் குறைவான மீன்பிடி விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட அதிநவீன ரோந்து கப்பல்களில் ரோந்து வந்த  இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மண்டபம்  மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை  கொண்டு தாக்கி உள்ளனர். இதில் அந்தோணி,ஜெபஸ்டின், சார்லஸ், ரத்தினம், அந்தோணி பிரசாத் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்  அந்தோனி பிரசாத் என்பவரின் படகில் ஓட்டுநராக சென்ற செல்வம் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது  வீட்டில் உள்ளார்.


 



மேலும், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இப்பகுதியில் மீன் பிடித்தால் கைது செய்வோம் என எச்சரித்ததால் அப்போது மீன்பிடித்த மீனவர்கள் அச்சத்துடன் இரவோடு இரவாகவும் காலையிலும்  கரை திரும்பினர். சில மீனவர்கள் இன்று காலை மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய போது மீண்டும்  இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தி கற்கள் மட்டும் பாட்டில்களை கொண்டு தாக்கியதால் மீனவர்கள் மீன் பிடிக்காமல் நஷ்டத்துடன் கரை திரும்பி வருகின்றனர். மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய  சம்பவம் இப்பகுதி மீனவர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்த தாக்குதல் சம்பவம் இன்று நேற்று மட்டும் அல்ல கடந்த இரண்டு மாதங்களாகவே தொடர்ந்து இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம்,பாம்பன், மண்டபம் தங்கச்சிமடம், ஆகிய பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை கற்களால் எறிந்தும், காலி மது பாட்டில்களை கொண்டு வீசி அடிப்பதும் சில நேரங்களில் ரப்பர் கொண்டு பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை காயப்படுத்தி அடித்து விரட்டி மிரட்டி வருகின்றனர்.  இந்த தொடர் தாக்குதலால் இந்த பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.



 


தாங்கள் சந்திக்கும் இன்னல் குறித்து கூறும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலை  தொடர்கிறது கடந்த ஆட்சியிலும் சரி, தற்போது நடந்துவரும் ஆட்சியிலும் சரி தொடர்ந்து,  மத்திய அரசு மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி அண்டை நாடான இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகின்றனர். ஆனால் இது தொடர்கதையாகவே நடந்து வருகிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.


 



நம் எதிரி நாடு என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் கூட  இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் துப்பாக்கியால் சுடுவதில்லை. ஆனால் நட்பு நாடான இலங்கை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது என தொடர்ச்சியாக செய்து வருகிறது. 1974 ஆம் ஆண்டில் கச்சத்தீவை அன்றைய ஆட்சியாளர்கள் சில அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு தாரை வார்த்திருந்தாலும்,   கச்சத்தீவு கடற்பரப்பில் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதியில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வருகின்றனர்.



ஆனால் இந்திய எல்லையை தாண்டி தங்கள் நாட்டுக்குள் நுழைந்துவிட்டதாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது, சித்ரவதை செய்வது, சுட்டுப் படுகொலை செய்வது என்கிற இலங்கையின் அட்டூழியங்கள் தொடருகின்றன. ஒரு காலத்தில் நம் வசம் இருந்த கச்சத்தீவு இலங்கையின் கைக்கு மாறியதால்,  இன்று கசப்பாகி  நமது தமிழக மீனவர்கள் நாள்தோறும் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு  இந்திய தரப்பிலிருந்து கடுமையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழக மீனவர்களின் கண்ணீர் கதை தொடர்கதையாகத்தான் இருக்கும்.