மதுரையில் பிறைக்கொடி ஏற்றப்பட்டு தொடங்கிய கோயில் திருவிழா - நூற்றாண்டு கடந்து சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைத்துவரும் கோவில் திருவிழா.

 

நூற்றாண்டுகளை கடந்த மதுரை திருவிழா

 

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி கிராமத்தில் உள்ள கிராம மந்தையம்மன் கோயில், காளியம்மன், பத்ரகாளியம்மன், முனியாண்டி கோயில் உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. நூற்றாண்டுகளை கடந்து ஒவ்வொரு  2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உற்சவ விழா தொடங்கியது.

 

இதனை முன்னிட்டு கோயிலில் மந்தையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் முனியாண்டி சாமியிடம் அருள்வாக்கு பெற்ற பின்னர் கோயில் நிர்வாகிகள் முனியாண்டி கோயில், காளியம்மன், பத்ரகாளியம்மன் கோயில்களுக்கு ஊர்வலமாக சென்று வணங்கிய பின்னர் ஒவ்வொருவரையும் விழாவிற்கு அழைத்துவந்தனர்.

 

அப்போது அங்கு சிக்கந்தர் அவுலியாவை வணங்குவதற்காக வைக்கப்பட்ட பிறைக்கொடிகளுடன் காத்திருந்த இஸ்லாமியர்கள் மத்தியில் வந்த முனியாண்டி சாமி கொடி கம்பத்தை தொட்டு ஆசிர்வதித்த பின்னர்  இந்து - இஸ்லாமியர் மக்கள் இணைந்து சிக்கந்தர் அவுலியாவை வணங்கும் வகையிலான பிறைக்கொடி கட்டிய கொடிக்கம்பத்தை தோளில் சுமந்தவாறும் கொடி முன்பாக காவல் தெய்வங்கள் துணையுடன்  ஊர்வலமாக எடுத்துசென்றனர். 

 

சமூக நல்லிணக்க திருவிழா

 

அப்போது இந்து - இஸ்லாமிய மக்கள் இணைந்து அல்லாஹ் அக்பர் - ஓம் சக்தி பராசக்தி ஓம் என்ற பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு  கொடி கம்பங்களை நட்டுவைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.  பின்னர்  விழா தொடங்கியதற்கான வான வேடிக்கைகள் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த அனைத்து பக்தர்களுக்கும் இஸ்லாமியர்கள் சர்பத் உள்ளிட்டவற்றை வழங்கினர். 

 

பிறைக்கொடி ஏற்றப்பட்டு கோயில் விழா தொடங்கிய நிலையில் ஊரணி கரையில் இருந்த  சிக்கந்தர் பாத்திஹா கொடுக்கும் இடத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றியும், ஊதுபத்தி ஏற்றியும் பூக்களை தூவியும் வழிபட்டனர். தொடர்ந்து கிராமத்திற்கு சொந்தமான அனைத்து சமூகத்தினருக்கும் மாலை அணிவித்தும் வஸ்திரம் சாத்தப்பட்டும் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சக்தி கரகம் எடுக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு பக்தர்களும் கைகளில் தீச்சட்டி ஏந்தியவாறு மந்தையம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.

 

மதுரையில் நூற்றாண்டு கடந்தும் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் பாரம்பரியமாக மந்தையம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. இதில்  இஸ்லாமியர்களும் - இந்துக்களும் ஒற்றுமையோடு சாதி மத வேறுபாடின்றி  சாமி தரிசனம் செய்து கோயில் விழாவை கொண்டாடிவருகின்றனர்.