மதுரை மாநகராட்சி தேர்தல் வேலைகள் தொடங்கியதில் இருந்தே, மதுரையில் உள்ள இரண்டு  அமைச்சர்களுக்கு இடையே மறைமுக போட்டி நிலவுகிறது. அமைச்சர் பி.மூர்த்தியின் ஆதரவாளர் வாசுகி சசிகுமார் மேயர் பதவியை அடைவார் என  பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அமைச்சர் பி.டி.ஆரின் நெருங்கிய ஆதரவாளர் பொன்.வசந்த்தின் மனைவி, இந்திராணிக்கு மேயர் பதவி கொடுக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வேட்பாளர் மேயரானதால் திமுகவில் கப்சிப் நிலவியது. அன்றில் இருந்தே மேயரும் அமைதியாக இருந்துவருகிறார்.



 

பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தால் பிரச்னைகள் ஏற்படலாம் என மேயர் பதவி ஏற்றபின் நன்றி தெரிவித்ததோடு, செய்தியாளர்கள் கேள்விக்கு செவி சாய்ப்பதில்லை. அமைச்சர் பி.டி.ஆர் சொல்வதை கிளிப்பிள்ளை போல் பின்பற்றி வருகிறார். தன்னைக்கொண்டு வந்தது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்தான் என்பதால், அமைச்சர் மூர்த்தியை சட்ட செய்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் கூட புத்தக திருவிழாவில் அமைச்சர் மூர்த்தி வந்தபோது ஒதுங்கி நின்றது, சலசலப்பை ஏற்படுத்தியது.

 

மேயர் பதவியில் தன் பலத்தை காட்டிய பி.டி.ஆர்., மீண்டும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் கூட தன் பலத்தை காட்டவேண்டும் என மெனக்கெடுவதாக உடன் பிறப்புகள் புகார் வாசிக்கின்றனர்.



 

தி.மு.க.,வில் ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் உள்ள இடங்களை தவிர சில இடங்களில் இரண்டு மாவட்ட செயலாளர் பதவியை உடைத்து ஒரே மாவட்ட செயலாளர் பதவியாக மாற்றி வருகின்றனர். 8 மாவட்டங்களில் மதுரை மாவட்டம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதில் மதுரை நகர் மாவட்டங்கள் இரண்டை ஒன்றாக்கப்பட்டுள்ளதால். மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதில் முன்னாள்  தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்.எல்.ஏ., கோ.தளபதியும், மாணவர் அணி மாநில துணை செயலாளர் அதலை செந்திலுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. கோ.தளபதிக்கு அமைச்சர் மூர்த்தியும், அதலை செந்திலுக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் மறைமுக ஆதரவு அளித்து வருவதாக சொல்லப்படுகிறது.

 

தி.மு.க., தலைமை கோ.தளபதியை தேர்வு செய்து லிஸ்ட்டில் வைத்திருந்தாலும் செந்திலை மாவட்ட செயலாளர் ஆக்கினால் தான் மதுரை மாநகரை ஒட்டுமொத்தமாக கட்டுக்குள் வைக்க முடியும் என பி.டி.ஆர்., ஆரூடம் செய்வதாக சொல்லப்படுகிறது.



இந்நிலையில் இதில் மீன் பிடிக்கும் விதமாக முன்னாள் மாவட்ட செயலாளர் பொன்.முத்துராமலிங்கம் பி.டி.ஆர்., குடும்பத்தோடு ஒதுங்கி இருந்த சூழலில் தற்போது தன் சமூகத்தை சேர்ந்த அதலை செந்தில் தேர்வு செய்யப்பட வேண்டும் என மாங்கு, மாங்கு என்று உழைக்கிறராம். இதனால் பொன்.முத்துராமலிங்கத்திற்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.



இதையடுத்து பகுதி செயலாளர்கள், மாவட்ட பிரதிநிகளை கூவத்தூர் ஸ்டைலில் பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதலை செந்திலுக்கு ஆதரவு தரவேண்டும் என கோரி "வைட்டமின் - ப"வை கொடுத்து சொகுசு ஹோட்டலில் தங்க வைத்துள்ளனராம்.



ஒவ்வொரு நிர்வாகிகளாக தூக்கிய காரணத்தால் சுதாரித்த கோ.தளபதி தனக்கு தேவையான நிர்வாகிகளை பாண்டிச்சேரிக்கு கொண்டு சென்றுள்ளதாக உறுதியான தகவல் வாசிக்கப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் லட்சங்களில் மூழ்கி சந்தோஷம் அடைந்துள்ளனராம். அதிமுகவினர் கையில் எடுத்த கூவத்தூர் ஸ்டைலை மதுரை திமுகவினரும் கையில் எடுத்தது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.