மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் இந்திராணி மற்றும் ஆணையாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் தொடர்பாகவும் மாமன்றத்தில் ஒப்பதல் பெறுவதற்கான குறிப்பு வழங்கப்பட்டது. இதில்  மதுரை மாநகராட்சி மேயருக்கு ஆலோசனைகள் வழங்க,  கொள்கைகள், செயல்முறை மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குதல், ஆய்வுகள் தணிக்கைகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றில்  மேயருடன் கலந்து கொள்ளுதல், அரசுத் துறை மற்றும் உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களுடன் பணிகள் தொடர்பான மேயர்  தெரிவிக்கும் தகவல்களை தகவல் பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அர்ச்சனா தேவி  என்பவரை ஊதியமின்றி நியமனம் செய்வதற்கான ஒப்பதல் கோரப்பட்டிருந்தன. 





மேயரின் ஆலோசகர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் என்பதால் ஏற்கனவே பல முறை சர்ச்சை ஆகியுள்ள நிலையில் தற்போது மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிதியமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில் மேயரை கொண்டுவருதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர். இது  சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் மேயரை தனி நபர் மூலமாக கட்டுப்படுத்தும் முயற்சி எனவும் எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற கேள்வி நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்களின் கேள்விகளுக்கு மேயர் பதிலளிக்காமல் முழுவதிலுமாக மேயரின் கூற்றுபடி என்ற வார்த்தையோடு மாநகராட்சி ஆணையாளரே பதில் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.



தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நிதி குறித்து எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்வியின்போது பதிலளித்த மேயர் மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி கடன் உள்ளதாக பதிலளித்த நிலையில், ஒப்பந்த பணியாளருக்கான நிலுவைத்தொகை போன்ற நிதிச்செலவீனங்கள் இருப்பதால் சிறப்பு நிதியை உயர்த்த வாய்ப்பில்லை என பதிலளித்தார். இதனையடுத்து சொத்து வரி உயர்வை திரும்ப பெற கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் மேயரை முன்பாக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து தி.மு.கவினரும் முழக்கமிட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.



இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு கேள்விக்கான வாய்ப்பு வழங்கவில்லை எனவும்,  மேயருக்கு விருப்பமுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிப்பதாகவும் கூறி மேயர் மற்றும் ஆணையாளரிடம் முறையிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் சபையின் மாண்பை கலங்கடிக்கும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை வேண்டும் என திமுக மண்டல தலைவர்கள் மேயரிடம் மனு அளித்தனர்.



 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா பேசுகையில், “சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் எனவும், உறுப்பினர்களின் கேள்விக்கு மேயர் பதிலளிக்கவில்லை, மேயருக்கான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக குறிப்பு இடம்பெற்றது தேவையற்றது, கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை தற்போது முடக்கிவைக்கிறார்கள்” என குற்றம்சாட்டினர்.