மதுரை முனிச்சாலை ஜெயா ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "விசாரணையின் போது அரசு தரப்பில் மனுதாரர்  தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்வதாக, ஆசிரியர்கள் புகார் அளித்ததாகவும், அதனடிப்படையிலேயே அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தரப்பிலும் அது தொடர்பாக தனியே மனுக்களை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த வழக்கில் மனுதாரர்  2 ஆசிரியர்களை பணியமர்த்துமாறு கோராமல், பணி மாறுதல் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களின் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியுள்ளார். நீதிமன்றம் இதுபோன்ற செயல்பாடுகளை பொறுத்துக் கொள்ளாது. கல்வி நிறுவனங்களில் இதுபோல பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக எழுவதைக் கண்டு நீதிமன்றம் அதிர்ச்சி அடைகிறது. உரிய நடவடிக்கை எடுக்காததால், இதுபோன்ற நபர்கள் நீதியின் பார்வையிலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் நீதியை நிலைநாட்ட நீதிமன்றம் எந்த எல்லைக்கும் செல்லும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

 

ஆகவே,  2 பெண் ஆசிரியர்களும், அனுப்பிய புகார் கடிதம் அடிப்படையில் கீரைத்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். அவர்களது பணி பதிவேடுகளை மாவட்ட கல்வி அலுவலர் வழக்கு முடியும் வரை தனது பொறுப்பில் வைத்திருக்க வேண்டும். கீரைத்துறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வழக்கின் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 



 


உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தான் உள்ளது. எனவே, ஆங்கிலத்தில் தான் தகவல் கொடுக்க முடியும் - உயர்நீதிமன்ற தரப்பு வழக்கறிஞர்




 

திருச்சியைச் சேர்ந்த கணேசன், ஒரு வழக்கு தொடர்பான விபரத்தை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கேட்டிருந்தார்.இதற்கான பதில் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டது. தமிழ் மொழியில் விபரத்தை தரக்கோரி மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீட்டு மனு செய்தார்.இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர், அவர் கோரிய விபரத்தை தமிழில் கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர்(நிர்வாகம்) மற்றும் பொது தகவல் அலுவலர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்யப்பட்டது.

 

இந்த மனு தலைமை நீதிபதி பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றம் தரப்பில், உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தான் உள்ளது. எனவே, ஆங்கிலத்தில் தான் தகவல் கொடுக்க முடியும் என வாதிடப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், தமிழில் விபரத்தை கொடுக்க வேண்டுமென்ற மாநில தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை ஏப்ரல் 28க்கு தள்ளி வைத்தனர்.