மதுரை அ.தி.மு.க  மாணவரணி  கூட்டம்  இன்று மதுரை கோரிப்பாளையம் பகுதியில்  நடைபெற்றது. இதில் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டார். பின்னர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம்," தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட 7.5% இடஒதுக்கீடு திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய பயனளித்தது. இது ஏழை, எளிய மக்களுக்கு முத்தாய்ப்பான திட்டம். அந்த திட்டம் தொடர்பாக தற்போதைய  அரசு எதுவும் சொல்லாமல் உள்ளது.

 



 

அதே போல அ.தி.மு.க அரசு கொண்டு வந்த விலையில்லா லேப்டாப், சத்தான உணவு, 16 வகையான பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை தொடருமா என கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம் என சொன்னார்கள். ஆனால் நிதியமைச்சரோ  புது புது கண்டுபிடிப்பாக சொல்கிறார்.  தி.மு.கவை உண்மையான மான் என நினைத்து மக்கள் பொய்யான மானை தேர்ந்தெடுத்துவிட்டனர். கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார்களா என தெரியவில்லை. கொரானாவை ஒழித்தோம் என அவர்களை, அவர்களே பாராட்டி கொள்கின்றனர். தோழமை கட்சிகளும் பாராட்டுகின்றனர். 

 



 

கொரானா வெகு வேகமாக பரவிய போதும் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் மாவட்டம் தோறும் ஆய்வு செய்தார். பாரத பிரதமரால் பாராட்டப் பெற்றவர் பழனிசாமி. மற்ற மாநிலத்திடம்  தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும் என பிரதமர் கூறினார் என்பது குறிப்பிடதக்கது. எனவே வீணாக  பெருமை பேசாமல் கொரானா மூன்றாம் அலைக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுக்க முழுக்க மாணவர் சமுதயத்தை ஏமாற்றி தி.மு.க அரசு அமைந்துள்ளது.



நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து இளைய சமுதாயத்தையும், மாணவர் சமுதாயத்தை ஏமாற்றி , தற்போது தி.மு.கவின் இளைய சூரியனாக காட்சி கொடுக்கும் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் நீட்டை ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதி செய்தார்கள்" என சுட்டிக்காட்டினார்.


 




 

 

அணில் காரணமாக ஏற்படும் மின்தடை குறித்த கேள்விக்கு,

 

 ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து முதலில் நான் தப்பித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.  தி.மு.க அமைச்சர்கள் என்னை விஞ்ஞானி எனக்கூறுவர். ஆனால் தற்போது புதிய கண்டுபிடிப்பாக மின்சாரதத்துறை அமைச்சர் அணிலை கண்டுபிடித்துள்ளார். அவர் தான் உண்மையான விஞ்ஞானி. எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின் மற்றும் இரும்பு கம்பிகளில் செல்கிறது. அவரின் கண்டுபிடிப்புக்கு ஆஸ்கார் விருது நோபல் பரிசு கொடுக்க வேண்டும்” என கிண்டலாக தெரிவித்தார்.