தி.மு.கவினர் வெற்றி பெற்ற மமதையில் பேசுகிறார்கள். எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தி.மு.க தனித்து நிற்க தயாரா..? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.

 

மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

 

முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மதுரை மேற்குத் தொகுதியில் பொதுமக்களின் நலனுக்காக 21 லட்சம் மதிப்பீட்டில் இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த இ-சேவை மையத்திற்கான அனைத்து உபகரணங்களும் பொதுப்பணித்துறை சார்பில் வழங்கப்படுகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இங்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் ஆகியவை விண்ணப்பிக்கலாம். பி.ஜே.பிக்கு எங்களுக்கும் ஒட்டுறவு இல்லை என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், நேற்று நானும் கூறிவிட்டேன். எதற்காக இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம்.? இந்த தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது. இடைத்தேர்தல் என்றாலே புது புது யுத்திகளை திமுக சட்டத்திற்கு புறம்பாக செய்யும். பணம் ஆறாக ஓடும் மக்களை எந்த வகையில் கவர்வதற்கும் தி.மு.கவினர் செயல்படுவார்கள்.

 


 

ஓட்டு வங்கி தெரிந்துகொள்ள தேர்தல் களம்

 

பா.ம.க வின் ஓட்டு வங்கி எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்கள் இந்த இடைத்தேர்தலில் நிற்கிறார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. அதனால் பக்கத்து வீட்டில் பூத்த மல்லிகை பூவிற்கு மனம் இல்லை என்று கூற முடியாது. ராகுலின் விடாமுயற்சி, காங்கிரசை கட்டி காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றார்.

 

தனித்து நிற்க தயாரா.?

 

தி.மு.கவினர் வெற்றி பெற்ற மமதையில் பேசுகிறார்கள். எந்தக் கூட்டணியில் இல்லாமல் திமுக தனித்து நிற்க தயாரா..? அ.தி.மு.க., போல் தி.மு.க தனித்து நின்று அவரவர் திறமையை, செல்வாக்கை காண்பிக்கட்டும்.! திமுக தனித்து நிற்க தயாரா.? மக்களிடத்தில் உங்கள் சாதனையை சொல்லி சந்திக்க தயாரா.? ஜெயலலிதா போன்று ஒரு ஆணித்தரமான முடிவுவெடுக்க இன்றைய முதல்வர் தி.மு.க தலைவர் ஸ்டாலினும், தி.மு.க தலைவர்களும் முடிவெடுப்பார்களா.? என்று கேள்வி எழுப்பினார். சட்டமன்றத்தில் வருகின்ற திங்கட்கிழமை என்னுடைய உரை வருகிறது. அப்போது பாருங்கள்” என்றார்.