ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு வரும் வி.கே.சசிக்கலா சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை அரண்மனைக்குள் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக வீர பேரரசி வேலுநாச்சியாரின் வாரிசுதாரர்களான ராணி மதுராந்தகி நாச்சியார் வி.கே.சசிக்கலாவிற்கு வரவேற்பு அளித்தார். அதன் பின்னர் சிவகங்கை பையூர் பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீர பேரரசி வேலுநாச்சியார் நினைவிடம் வந்து அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் வீரத்தாய் குயிலியின் நினைவு தூனிற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.






 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ”அ.தி.மு.க.,வில் இணைவது நிச்சயம். அடுத்த ஆட்சி அ.தி.மு.க., ஆட்சிதான் அதுவும் மக்கள் ஆட்சியாக இருக்கும்”.  தி.மு.க.,வின் ஓராண்டு சாதனை குறித்த கேள்விக்கு ”தி.மு.க.,வினர் ஓராண்டு சாதனை என சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் மக்கள் அதுபோல் நினைக்கவில்லை, மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். இந்த ஆட்சியில் எந்த பயனும் இல்லை என்கிறார்கள். அதுவே என்னுடைய பார்வையும் கூட. 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் ஒன்று கூட செய்யவில்லை. சொல்வதெல்லாம் நன்றாக தான் சொல்கிறார்கள் ஆனால் செய்கை தான் நடைபெறவில்லை”.



பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக போராடும் அரசு ஊழியர்கள் குறித்த கேள்விக்கு ’அதை செய்ய வேண்டும். அதை அவர்களே தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் கண்டும் காணாதது போல் இருப்பது எப்படி..!”.



மாநில அரசை மத்திய அரசு நசுக்குவதாக மாநில அரசு கூறிவரும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு ”அம்மா இருக்கும்போதும் வேறு அரசு தான் மத்தியில் இருந்தது. ஆனால் அவர் இதுபோல் குறை கூறியது இல்லை. அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை தீவிரமாக கேட்டு பெற்றுக்கொடுத்தார். அதுபோல் திமுக செய்ய வேண்டும்.  மத்திய அரசை குறைகூறுவது மட்டுமே நம்முடைய வேலை இல்லை. ஓர் ஆண்டு கடந்துவிட்டது. மக்கள் இவர்களுக்குத்தான் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள் அதை விடுத்து மத்திய அரசை குறைகூறிக்கொண்டே எத்தனை ஆண்டுகள் கடத்துவார்கள்.  இவர்கள் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்ய வேண்டும். வெறுமென பேசிக்கொண்டு இருப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. தேர்தல் நேரத்தில் மாற்றுக்கட்சியினர் குறித்து குறைகூறி பேசலாம். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் முதலமைச்சர் என்கிற முறையில் மக்களுக்கு எவ்வாறு நல்லது செய்யலாம் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.  ஆட்சி முடியும் வரை மத்திய அரசை குறைகூறிக்கொண்டே இருப்பார்களா?” என கேள்வி எழுப்பினார்.