2013 ஆம் ஆண்டு சட்டத்தின் படி மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளுதல், பாதாள சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் ரோபோட் மற்றும் நவீன இயந்திரங்களைக் கொண்டு செய்ய கோரிய வழக்கில், வழக்கு குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் முழுமையான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த அய்யா உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த பொது நல மனுவில், "2013ஆம் ஆண்டு கைகளால் மலம் அளுவதை தடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் தங்களது கைகளால் பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

 

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பொழுது பல தூய்மை பணியாளர்கள் உயிரிழந்ததை அடுத்து 2013 ஆம் ஆண்டு மலம், குப்பை, பாதாள சாக்கடை ஆகியவற்றை மனித சக்தியை கொண்டு எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்பும் பல தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடை, சாக்கடைகள் சுத்தம் செய்யும் பொழுது உயிரிழந்துள்ளனர்.

 

தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பை குறைக்க பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, குப்பை அள்ளுவது சாக்கடை சுத்தம் செய்வது போன்ற செயல்களை நவீன இயந்திரங்கள் கொண்டும், ரோபோட் பயன்படுத்தியும் செய்ய வேண்டும். என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் மனு மீது தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

எனவே, 2013 ஆண்டு சட்டத்தின் படி மனிதர்களைக் கொண்டு மலம் அளுதல், பாதாள சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் ரோபோட் மற்றும் நவீன இயந்திரங்களைக் கொண்டு செய்ய உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தூய்மை பணியாளர்கள் உரிய உபகரணம் இல்லாமல் சாக்கடை சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

 

இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சமர்ப்பித்துள்ள புகைப்படம் தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். புகைப்படம் குறித்த தகவல் உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். மனுதாரர் சமர்பித்த புகைப்படத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் ரூ. 1 லட்சம் வரை அபதாரம் விதிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், மனிதர்கள் கைகளால் சாக்கடைகள், குப்பைகள் போன்றவற்றை சுத்தம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தும், இதனை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அலட்சியம் காட்டுகின்றனர்.

 

தூய்மை பணியாளர்களுக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் முழுமையான பதில் மனுவை தாக்கல் உத்தரவிட்டு வழக்கு விசாரணை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.