கையால் மலம் அள்ளுபவர்களுக்கு சட்டப்படி அடையாள அட்டை வழங்கவும், கண்காணிப்பு குழு அமைத்து நிவாரண பணிகளை மேற்கொள்ள கோரிய வழக்கில், சுற்றறிக்கைப்படி இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரையைச் சேர்ந்த சகாய பிலோமின் ராஜ், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "மனிதர்கள் கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் விதமாக தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மதுரையில் 85 பேரும், விருதுநகரில் 169 பேரும் கையால் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அடையாள அட்டை வழங்கவில்லை. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. 

எனவே சட்டப்படி அடையாள அட்டை வழங்கவும், கண்காணிப்பு குழு அமைத்து நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அரசுத் தரப்பில், சட்டப்படி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிப்பு குழு அமைக்கப் பட்டுள்ளது. கையால் மலம் அள்ளுவதை தவிர்த்திடத் தேவையான இயந்திரங்களை வாங்கி பயன்படுத்துமாறு மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசின் சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து நீதிபதிகள், சுற்றறிக்கைப்படி இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட வழக்கு விசாரணையை நவம்பர் 14க்கு ஒத்தி வைத்தனர்.