தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிக்கு நிவராண பொருட்கள் அனுப்பி வைத்த பின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: தூத்துக்குடியில் அம்மா கிச்சன் மூலம் மழைவெள்ள நீர் வடியும் வரை மக்களுக்கு சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது. இதற்கான மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில் படகுகள் மூலம் உணவை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது கரையோர கிராம மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை மீட்பு பணியில் ஈடுபடவில்லை. இன்றைக்கு அமைச்சர்கள் கூட செல்ல தயக்கமாக உள்ளனர். அரசு இயந்திரம் முழுமையாக முடங்கி உள்ளது குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள பெருங்குளத்தில் மிகப்பெரிய சேதமடைந்துள்ளது. அந்த பகுதியில் நாங்கள் நேரடியாக சென்று பார்த்தோம். மேலும் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது அப்படி தூக்கி வீசும் பொழுது உணவு பாக்கெட்டுகள் உடைந்து சேதம் அடைகிறது.  அதனால் டிராக்டர் மூலம்,படகுமூலம் உணவுகளை வழங்க வேண்டும்.





பல இடங்களில் நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் போராடி வருகிறார்கள். குறிப்பாக உயிர் சேதம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதுவரை தூத்துக்குடியில் 20 பேர் பலியானதாக செய்திகள் வெளிவந்துள்ளது . அதேபோல் அரசு மருத்துவமனையிலும், நீதிமன்றங்களும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அம்மா உணவகத்தை கூட மூடிவிட்டார்கள் இது போன்ற காலங்களில் காமன் கிச்சன் மூலம் மக்களுக்கு நாங்கள் உணவுகளை வழங்கினோம். மேலும் தூத்துக்குடியில் ஆமை வேகத்தில்பணிகள் நடைபெறுகிறது. மீட்பு பணியில் ஒருங்கிணைந்த குழுக்கள் இல்லை இதனால் தோல்வி ஏற்பட்டதால் அரசின் மீது மக்கள் கோபம் அடைந்துள்ளார்கள். அமைச்சர்கள் ஏ.வ வேலு, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்டோர் உள்ளே போக முடியவில்லை அவர்களுக்கே சவாலாக உள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனை கூட மூன்று நாள் கழித்து தான் மீட்டுள்ளார்கள்.  தற்போது தூத்துக்குடி மாநகரில் 60 வார்டுகள் உள்ளது அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 480 வருவாய் கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் எல்லாம் மழை சூழ்ந்துள்ளது. இந்தியாவிலேயே குஜராத் அடுத்து இரண்டாவது இடத்தில் உப்பு ஏற்றுமதியில் தூத்துக்குடி உள்ளது ஏறத்தாழ 25000 ஏக்கர் உப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வருகிறது. இதையெல்லாம் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.





முதலமைச்சர் வானிலை ஆய்வு மையத்தை குற்றம் சாட்டுகிறார். 2022 ,2023 பட்ஜெட்டில் அப்போது நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர்.தியாகராஜன் வானிலை ஆய்வு மையத்தை துல்லியமாக கணக்கெடுக்க சூப்பர் கம்ப்யூட்டர் என்ற திட்டத்தை செயல்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுது என்று கூறினார். இதுவரை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இது குறித்து ஊடகங்கள் எல்லாம் செய்தி வெளிவந்துள்ளது.  ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் மழை வடிகால் பணிக்கு  4000 கோடியை செலவு செய்தோம் என்று முதலமைச்சர் கூறினார் ,அதனை தொடர்ந்து 5,120 கோடியை செலவு செய்தோம் என அமைச்சர் நேரு கூறுகிறார். தற்போது மழை பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையத்தை முதலமைச்சர் முதல் அமைச்சர் வரை ஏற்கனவே குற்றம் சாட்டினர்  ஆனால் வானிலை ஆய்வு மையத்தை துல்லியமாக கணிக்க 10 கோடியில் சூப்பர் கம்ப்யூட்டர் ஒதுக்கப்பட்டது என அமைச்சர் கூறுகிறார் ஏன் இந்த வேறுபாடு என மக்கள் கேட்கிறார்கள்.




மக்கள் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள் சோமலிய நாட்டில் கூட இந்த நிலைமை இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நேச கரம் நீட்டாமல், தனது கூட்டணி பறிபோகி விடுமோ என்ற அச்சத்தில் டெல்லி சென்றார். மக்களின் அச்சத்தை போக்காமல் தனது கூட்டணி உரிமை பறிபோகிவிடுமோ என்ற அச்சத்தில் டெல்லி சென்றுள்ளார் என மக்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஏற்கனவே கொரோனா காலங்களில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அடுப்பு மருந்து இருக்கும் என அம்மா கிச்சன் உணவு வழங்கப்பட்டது அதேபோல் தற்போது வெள்ளமழை நீர் வடியும் வரை அம்மா கிச்சர் மூலம் மக்களுக்கு உணவு வழங்கப்படும் என கூறினார்.