கட்சியை காப்பாற்ற நான் தயார்-மாஸ் காட்டும் மணிகண்டன்



முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மீதான துணை நடிகையின் புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்துள்ள அவர் சிறிது காலம் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. அரசியல் நிகழ்ச்சிகள்  கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை முற்றிலும் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட கட்சி நிர்வாகிகளையும்  அவருடைய ஆதரவாளர்களையும் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு தீபாவளி பரிசும் வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைத்தது. இதில், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டனை   தமிழக அமைச்சரவையில் இளம் வயதிலேயே  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ராமநாதபுரம்  மாவட்டத்தின் ஒரே அமைச்சராகவும்  இருந்தார். 




இந்நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ந்தேதி   மறைந்ததை அடுத்து, எடப்பாடி கே. பழனிச்சாமி  முதல்வராக பதவியேற்றபோது புதிதாக அமைச்சரவையில் கே.ஏ.செங்கோட்டையன் சேர்க்கப்பட்டார். ஓ. பன்னீர் செல்வத்துடன் இணைந்து அமைச்சரவையில் இருந்து வெளியேறிய பாண்டியராஜன் வகித்து வந்த பள்ளிக் கல்வித் துறை செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டது. மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்ட பிறகு அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார். அந்தத்துறை செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டது. இதற்கு பிறகு, அமைச்சரவையில் சிலரது துறைகள் மாற்றப்பட்டனவே தவிர, யாரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவில்லை.


இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரமக்குடியில் நடந்த அரசு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், தமிழகத்தில் கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட்டது குறித்து முதல்வர் பழனிச்சாமி என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. இதனால், அரசுக்கு மாதம் 27 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும், கேபிள் டிவி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது செட்ஆப் பாக்ஸ் மாற்றம் தொடர்பாகவும், தனியாக கேபிள் டிவி நடத்தி வருவதாகவும் சில குற்றச்சாட்டுகளை கூறினார்.


மேலும், தன்னிடம் இருந்த கேபிள் டிவி நிர்வாகத்தைப் பிரித்து உடுமலை ராதாகிருஷ்ணனை நியமித்ததால் அமைச்சர் மணிகண்டன் கடும் அதிருப்தியில் இருந்தார். மணிகண்டனின் பேச்சு கட்சித் தலைமைக்கும், முதல்வருக்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் அன்றிரவே நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மணிகண்டனிடம் இருந்து பறிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறையை, அப்போதைய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்துக்குப் பின் முதல்வராகப் பொறுப்பேற்ற பழனிசாமியின் அமைச்சரவையில் இருந்து முதல்முறையாக நீக்கப்பட்டவர் மணிகண்டன் என்பது குறிப்பிடத் தக்கது. இதனையடுத்து அமைச்சர் பதவியை இழந்த அவர், ராமநாதபுரம் எம்.எல்.ஏ வாக தனது பணியினை செய்து வந்தார். 


இந்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் கட்சித் தலைமை அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. ராமநாதபுரத்தில் அவர் போட்டியிட்டால் உறுதியாக  வெற்றி பெறுவார் என அவரது ஆதரவாளர்களால் கூறப்பட்டு வந்தது. இதனால், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட  அவருக்கு மீண்டும் அதிமுகவில் வாய்ப்பு  வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது மேலும் அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது.  இதனால் சட்டமன்ற தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவர் தேர்தல் பணியாற்ற வில்லை என்ற புகாரும் அவர் மீது வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில்,  ராமநாதபுரம் உட்பட நான்கு தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது.  இந்த  தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன்  வெற்றி பெற்று ஆட்சியை  பிடித்தது.




அமைச்சரமாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் கம்பீரமாக வலம் வந்த டாக்டர் மணிகண்டன், தற்போது, கட்சியில், கழக மருத்துவர் அணி மாநில துணைச்செயலாளராக மட்டுமே  இருந்து வரும் நிலையில், கடந்த  மே மாத இறுதியில் அவர்மீது ஒரு புகார் ஒன்றை கொடுத்தார் மலேசிய துணை நடிகை சாந்தினி. அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை கருவுறச் செய்து ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐ.பி.சி 323 வேண்டுமென்றே காயப்படுத்துதல், 313 பெண்ணிடம் அத்துமீறி செயல்படுதல், 417 நம்பிக்கை மோசடி, 376 ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல், 506(1) கொலை மிரட்டல், 67 a IT act ஆபாசத்தை உள்ளடக்கிய புகைப்படங்களை வெளியிடுதல், பகிர்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி  அவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், பெங்களூருவில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 7ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.


ஜாமீனில் வெளிவந்த  பின்பும் அவர் பெரும்பாலான நாட்களில் சென்னையிலும் மதுரையிலும் தங்கியிருந்தார். ராமநாதபுரம் பக்கம் அவர் வரவில்லை. பல்வேறு சர்ச்சைகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு  நேற்று ராமநாதபுரத்திற்கு வருகை தந்த அவர் கட்சியினரையும் தனது ஆதரவாளர்களையும் சந்தித்து பேசினார்.  வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி அவருடைய ஆதரவாளர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பரிசுப் பொருட்களை வழங்கினார்.  இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற அவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.




இதனை தொடர்ந்து அவரைச் சந்தித்த நம்மிடம் பேசிய அவர் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் அரசியல் களத்தில் அடி எடுத்து வைத்துள்ளேன். இது எனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.  எனது அரசியல் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான்.  இந்த  மாவட்டத்தில் கட்சியை வளர்த்து எங்கள் குடும்பம்.,  எனவே எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் நான் கட்சியை காப்பாற்ற தயாராக இருக்கிறேன். மீண்டும் மக்கள் பணியாற்ற களம் இறங்கி விட்டேன் என ரீ என்ட்ரி கொடுக்கிறார் முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்.