சென்னை, அசோக்நகர் பகுதியை சேர்ந்த  கயல்விழி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்த பொது நல மனுவில் "ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ள முனியசாமி மற்றும் அவரது மனைவி கீர்த்திகாமுனியசாமி உள்ளிட்டோர் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களின் உறவினரான நான் கல்லூரியில் படித்து வந்த பொழுது மாற்று ஜாதியை சேர்ந்த செல்வகுமார் உடன் காதல் செய்ததால் முனியசாமி தலைமையிலான உறவினர்கள் என்னை ஆணவக் கொலை செய்வதற்காக முயற்சி செய்தனர். செல்வகுமார் தொடர்பை துண்டிக்க செய்தனர். இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டோம் இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்தவர் முனியசாமி அவருடைய கட்சி பலம் மற்றும் அதிகார பலத்தை கொண்டு எங்களை மிரட்டி வருகிறார். தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
  

 



 

இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதியின் ஜாதி மற்றும் மத ரீதியான பாகுபாடு பார்க்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கடந்த 8 ஆண்டுகளாக என் மீது  பாகுபாடு கொண்டு என்னை பலவகைகளில் தொந்தரவு செய்து வருகின்றனர். அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் அவரது மனைவி கிருத்திகா முனியசாமி மற்றும் அவர் சார்ந்திருந்த அதிமுக கட்சி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணைய விதிமுறையை  பின்பற்றாமல், ஜாதி பாகுபாடு பார்க்கும் அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர்  முனியசாமி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க  வேண்டும். மேலும் அவர்   சார்ந்துள்ள அதிமுக கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு ஏற்கனவே, விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், வழக்கில் பொது நலம் இல்லை. தனி நபர் பாதிப்பு குறித்த மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டும் என கூறியிருந்தனர்.இந்நிலையில் இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் முனியசாமி மீது நடவடிக்கை கோரிய மனுவை பரிசீலிக்க மட்டுமாவது உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.இதையேற்ற நீதிபதிகள், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் தொடர்ச்சியாக இடையூறு செய்து வரும்  அதிமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி மீது நடவடிக்கை கோரி கயல்விழி தொடர்ந்த மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.