செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அஞ்சல் ரெட்டிகுப்பம் கானாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் என்பவரின் மகன் ஏழுமலை பெஞ்சமின் (51). ரியல் எஸ்டேட் செய்து வந்த இவர் தனது தொழில் பழக்கத்தின் அடிப்படையில் தான் கல்வி துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும் தனக்கு அரசு உயரதிகாரிகள் தெரியும் என்றும் அதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகள் வாங்கி கொடுத்துள்ளதாகவும் பலரை நம்ப வைத்துள்ளார். இதுபற்றி தொழில் ரீதியாக பழகி வந்த ராமநாதபுரம் காளிகாதேவி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் ராஜா என்பவர் தனது குடும்பத்தினருக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளார்.
இந்த பணத்தை பெற்றுக்கொண்ட பின் சொன்னபடி வேலை எதுவும் வாங்கித் தராமல் இழுத்தடித்த ஏழுமலை பெஞ்சமினிடம் பணம் கொடுத்தவர்கள் வேலை குறித்து கேட்டபோது, சிலருக்கு போலியாக பணி நியமன ஆணை தயார் செய்து வழங்கி உள்ளார். இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நபர்கள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பணியில் சேர வந்த போது அங்கிருந்த அலுவலர்களிடம் 'நாங்க டூட்டீல ஜாய்ன் பன்ன வந்திருக்கோம்னு' சொல்ல, 'இங்க எந்த வேலையும் வேகண்ட் இல்லையே' ந்னு சொல்லி அப்பாயின்மெண்ட் ஆர்டரை வாங்கி பார்த்தபோதுதான் அது போலி நியமன ஆணை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்துள்ளனர்.
இந்நிலையில், மீதமுள்ள நபர்களும் வேலைக்காக நெருக்கடி கொடுத்ததால் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமன ஆணையை வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதன்படி அவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு போலி பணி நியமன ஆணைகளுடன் வந்தபோது, அவரிடம் ஏற்கனவே ஏமாந்தவர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் இந்த ஏமாற்று பேர்வழி மீது அனைவரும் சேர்ந்து ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏழுமலை பெஞ்சமினை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று முன்பின் தெரியாதவர்கள் கூறினாலும், அரசு வேலையை பெறுவதற்கு பல்வேறு வழிமுறைகள் இருந்தும், முறையாக அதை பின்பற்றாமல் இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளின் பேச்சை நம்பி பொதுமக்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.