சிவகங்கை மாவட்டம் மானாமதுரை - மேல கொன்னகுளம், திண்டுக்கல் - அம்பாத்துரை ராஜபாளையம் - சங்கரன் கோவில் மற்றும்  சூடியூர் - பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக  ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும்.  மேலும் திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 22 வரை  ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.



 

திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை  கோயம்புத்தூர் - நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். இதே காலத்தில் சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல்படாது. ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில்  ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.  கோவில்பட்டி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில்  ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த இரண்டு நாட்களும் பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை சாத்தூர் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

 



 

குமாரபுரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 28 29 ஆகிய இரு தினங்கள் பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் இந்த பணிக்காக, இந்த ரயில்கள் செப்டம்பர் 30 அன்று மதுரை - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு பாலக்காடு செல்லும் ரயில் (16732) மதுரையிலிருந்து மாலை 06.30 மணிக்கு புறப்படும். தென்காசி - செங்கோட்டை இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 30 வரை மதுரையிலிருந்து மாலை 05.15 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை விரைவு ரயில் (06665) மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி - செங்கோட்டை விரைவு ரயில் (06657) ஆகியவை தென்காசி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்