புதுக்கோட்டை அறந்தாங்கி சேர்ந்த கவிவர்மன் என்ற சுரேஷ் கண்ணா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி 11 வயது சிறுவர் மீது, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது. நான்கு நாட்களுக்கு பிறகு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு தளத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார்.
அதுபோல சக்தி வாய்ந்த துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் மரணத்தை விசாரிக்கவும், சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கவும் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "கடந்த டிசம்பர் 30ம் தேதியே நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களிலும் அத்தளம் பயன்படுத்தப்பட மாட்டாது" என உறுதி அளிக்கப்பட்டது.இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான வழக்கை ரத்து செய்யவுக்கோறும் தாளாளர் மனுவிற்கு காவல்துறை பதில் தர உத்தரவு
நெல்லை தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் 17ல் கழிவறை சுற்று சுவர் இடிந்தது விழுந்தது . இதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, பள்ளியின் தாளாளர் செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், சம்பவம் நடந்த சில மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்ததாக கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்து மனுதாரரை விடுவிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதா? என்பது குறித்து, காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்