காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலையிலும் ஆய்வுப் பணிகளுக்குக் கல்வெட்டுப் படிகளை வழங்கிய கரு.ராஜேந்திரனை அமைச்சர் பாராட்டினார்.
கல்வெட்டுப் படிகளை அமைச்சரிடம் வழங்கிய கல்வெட்டு ஆய்வாளர்
புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பனையூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரும், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் தலைவருமான கரு.ராஜேந்திரன் (வயது 86) தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு செய்யும் பணியை கடந்த 50 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். கண்மாய் மடைகளில் கல்வெட்டுகள் இருப்பதை முதன்முதலில் கண்டறிந்து அவற்றைப் படியெடுத்து ஆய்வு செய்து அனைவருக்கும் அறிவித்தவர். பூலாங்குறிச்சி களப்பிரர் கல்வெட்டைக் கண்டறிந்தவர்.
படியெடுக்கப்பட்ட 1600க்கும் மேற்பட்ட கல்வெட்டுப் படிகள்
தன்னால் கண்டுபிடிக்கப்பட்டு படியெடுக்கப்பட்ட 1600க்கும் மேற்பட்ட கல்வெட்டுப் படிகளை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்நாடு தொல்லியல் துறை உள்ளிட்ட கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார்.
காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலையிலும் கல்வெட்டுப் படிகளை வழங்கினார்
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மருங்காபுரி, ராஜராஜேஸ்வரமுடையார் கோயிலில் தான் படியெடுத்த இரண்டாம் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த பெரிய அளவிலான 20 கல்வெட்டுப் படிகளையும், தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம், விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணற்றில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு ஆகியோருடன் நேரில் சென்று வழங்கினார். காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலையிலும் ஆய்வுப் பணிகளுக்குக் கல்வெட்டுப் படிகளை வழங்கிய கரு.ராஜேந்திரனை அமைச்சர் பாராட்டினார்.