மதுரை மாவட்டம் மேலூர் கம்பூர் கிராமத்தில் உள்ள சின்னக்கற்பூரம்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோயில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இதற்காக மக்கள்  விரதம் இருந்து காலையில்  பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தனர். அதன்பிறகு மஞ்சள் தண்ணீர் நிகழ்வு நடந்தது.  இதில் தண்ணீரில் மஞ்சள், வேப்பிலை கலந்து தங்கள் கேலிக்காரர்கள் மீது ஆண்களும் - பெண்களும் ஊற்றி விளையாடினர். மாலையில் சாமியை மலை ஏத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில்  வைந்தானை அடித்தல், கும்மிக்கொட்டுதல், ஒயிலாட்டம் ஆகிய பாராம்பரிய கலைகளை  நிகழ்த்தப்பட்டது.   பாட்டு வாத்தியார்கள்  சாமிகளின் வரலாறு ஊரின் பெருமைகளை உணர்த்தும் பாடல்களை பாடினார்கள்.


 





அதனை பின்பாட்டாக  பாடிபடியே பாரம்பரிய கலைகளை நிகழ்த்தது. இதில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பெண்கள் பச்சரிசி வெல்லம் கலந்து தெள்ளுமாவை கலந்து விழாவில் பங்கு பெற்றவர்களுக்கு அளித்தனர். திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாள் குறிக்கப்பட்டு பொங்கல் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து  இரவு முழுவதும்  ஒயிலாட்டம், வைந்தானை அடித்தல், கும்மியாட்டம் ஆகியவவற்றை மக்கள் நிகழ்த்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 

 





 திருவிழாவையொட்டி ஊரில் முதல்முறையாக வள்ளி திருமணம் நாடகம் நடத்தப்பட்டது.  அம்மை நோய் வருவதை தடுத்திட இப்பங்குனி பொங்கல் விழாவை  முன்னோர்கள்  ஆண்டுதோறும் கொண்டாடி வந்ததாகவும், இன்றளவும் அந்த பாரம்பரியம் தொடர்வதாக சமூக ஆர்வலர் செல்வராஜ் தெரிவித்தார். கம்பூர் பகுதியில் கம்பூர், அலங்கம்பட்டி , பெரியகற்பூரம்பட்டி , சின்னக்கற்பூரம்பட்டி ஆகிய கிராமங்களில் ஆண்டுதோறும்  பங்குனி பொங்கல் விழாவானது பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. 



 

எத்தனை நவீன மாற்றங்கள் நம் வாழ்வில் உள்ளே வந்துவிட்டாலும்  திருவிழாக்கள் மூலமாக மக்கள் தங்கள் வழிபாட்டு முறைகள் , கலைகள் முதலியவற்றை  பாரம்பரியம் , பழமை  மாறாது காத்து வருவது  ஆச்சரியம் தரும் ஒன்றாக உள்ளது. இது போன்ற விழாக்களை ஆவணப்படுத்தி வரும் கம்பூர் ஊராட்சி இளைஞர்கள் கூறுகிறார்கள்.