உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கொடியேற்றம் வெகுவிமர்சையாக கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. மிதுன லக்கனத்தில் கம்பத்தடி மண்டபத்தில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புல் வைத்து வெண்பட்டுவால் சுற்றி பிரமாண்டமான மாலையால் கொடி  ஏற்றப்பட்டது.






  


 

மலர்கள் தூவி கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின் சிவாச்சாரியார்கள், வேத விற்பனர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் பிரியா விடையுடன் கொடி கம்பத்தின் முன்பாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.  கொடியேற்றத்தை தொடர்ந்து சுவாமியும் அம்மனும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நிகழ்ச்சி 15 ஆம் தேதி வரை நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்ற விழாவானது இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதியுடன் நடைபெற்ற உள்ளது மதுரை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 12ஆம் தேதி பட்டாபிஷேகமும், 14ஆம் மினாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 



 

இந்நிலையில் விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகர காவல்ஆணையா் செந்தில்குமார், மாவட்ட எஸ்பி பாஸ்கரன், கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் அனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இக்கூட்டத்தில்  பேசிய அதிகாரிகள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்விற்காக வரும் 11ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து 16ஆம் தேதி்வரை தண்ணீர் திறக்கப்படவுள்ளதாகவும், சித்திரை திருவிழாவிற்காக சுகாதாரத்துறை சார்பில் 21கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும், கள்ளழகர் 457 மண்டகப்படிகளில் எழுந்தருளுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.



 

இதனை தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விழாவிற்கான பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் மட்டுமே கண்காணிக்க வேண்டும் கோவில் நிர்வாகம் தலையிட வேண்டாம் எனவும், விழா நடைபெறும் பகுதிகளுக்குள் அனுமதி சீட்டு இல்லாத நபர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம், அமைச்சர்களோ, நீதித்துறையினரோ யாராக இருந்தாலும் அனுமதி சீட்டு இன்றி காவல்துறையினர் அனுமதிக்ககூடாது என்று பேசிய அமைச்சர், இந்த ஆண்டு சித்திரை திருவிழா என்பது விழாவை எப்படி நடத்த போகின்றோம் என்பதற்கான சோதனை எனவே மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பு மற்றும் அனைத்து பணிகளை அனைத்துதுறை அதிகாரிகள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும், கடந்த 2019ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவில் உரிய ஏற்பாடு இல்லாமல் நடைபெற்றது” என கூறினார். முன்னதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதிகளிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.