பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க ராஜபாளையம், தென்காசி வழியாக தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06003) ஜனவரி 11, 13, 16 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 09.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி -  தாம்பரம் சிறப்பு ரயில் (06004) ஜனவரி 12, 14, 17 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு   மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். 




இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.


அதே போல் 22 இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளுடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவில்லா பொங்கல் சிறப்பு ரயில்கள்



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - தூத்துக்குடி  முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06001) ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து காலை 07.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - தாம்பரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06002) ஜனவரி 15 மற்றும் 17 ஆகிய நாட்களில் காலை 06.00 மணிக்கு புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்களில் 22 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில்  நின்று செல்லும்.