கொடைக்கானல் அருகே செம்பிரான்குளம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை ட்ரெக்கிங் மேற்கொண்ட வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த 10 இளைஞர்கள் மீது  கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு. மருத்துவம் மற்றும் விவசாய பணிகள் என்று பொய் காரணம்  கூறி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை கண்காணிப்பாளர்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 



தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு  உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த சனிக்கிழமை  மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் இருந்து இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். அப்போது கொடைக்கானல்  பகுதியில் வசிக்கும்  இளைஞர் உதவியோடு கொடைக்கானல் வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட செம்பிரான் குளம் கிராமத்தின் மலை மீது 10 இளைஞர்கள்  ட்ரெக்கிங் சென்றுள்ளனர். ட்ரெக்கிங் மேற்கொண்ட விடியோவை சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர்.



இதனையடுத்து வடகவுஞ்சி கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துறையினர் திண்டுக்கலை சேர்ந்த ஹரிஹரன்,கோபிநாத், கொடைக்கானலை சேர்ந்த முத்து ,ஆனந்த்,வினோத் குமார்,மணிகண்டன் உள்ளிட்ட 6 இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர், இதில் ஊரடங்கு விதிகளை மீறி விவசாய பணிகள் என்று பொய் கூறி கொடைக்கானலுக்கு வந்ததும், மலை உச்சி மீது ட்ரெக்கிங்  மேற்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது ,மேலும் இவர்களுடன் மதுரையை சேர்ந்த விஜய ராகவன், கண்ணன், ஜெயபிரகாஷ், பிரித்திவிராஜ் உள்ளிட்ட 10 நபர்கள் மீது,பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் நோய் தொற்று பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



 இளைஞர்கள் பயன்படுத்திய ஜீப் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை கொடைக்கானல் காவல் துறையினர் பறிமுதல்  செய்யப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் விவசாயம் மற்றும் மருத்துவம் என்று பொய்யான காரணங்கள்  கூறி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் எச்சரித்துள்ளார்.


பாண்டியர்களின் போர்க்களமா திண்டுக்கல்; குடகனாறு சொல்லும் வரலாறு!



மேலும் கொடைக்கானல் மலை பகுதிகளில் உள்ள அனைத்து  சோதனை சாவடிகளிலும் காவலர்கள்  தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் 24 மணி நேரமும் காவலர்கள் நியமிக்கப்பட்டு கொடைக்கானல் மலை பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுவருவதாகவும்  இதனையும் மீறி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார். கொடைக்கானல் செல்லும் மலைவழிச்சாலையில் காவல் துறை சார்பாக முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.