ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன்


 

உதவி செய்ய பெரும் அளவு பணம் தேவையில்லை, செய்ய மனம் இருந்தால் போதும் எப்படி வேண்டுமானாலும் உதவி செய்யலாம். என்று தன்னால் முடிந்த உதவிகளை பொதுமக்களுக்கு செய்துவருகிறார் ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன். இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சொந்தமாக  ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். ஆட்டோ ஓட்டுநராக இருந்து வாழ்க்கையில் முன்னேறி தற்போது 3 ஆம்புலன்ஸ் வாகனத்தின் உரிமையாளராக இருந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார், ராஜேந்திரன். மானாமதுரையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் கால்களை இழந்த பள்ளிக்குழந்தைகளுக்கு தன் நண்பர்கள் மற்றும் தன்னுடன் பணியாற்றும் நபர்களுடன் இணைந்து சுமார் 1 லட்சம்  ரூபாய் வழங்கினார். இதனால் சமூக வலைதளங்களில் ராஜேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்தது. தொடர்ந்து ராஜேந்திரன் ஆங்காங்கே தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார். காவல்துறையினரும், மருத்துவ ஊழியர்களும், ஏழை- எளிய மக்களுக்கும் பக்கபலமாக இருந்துவருகிறார்.

 


இந்நிலையில் தற்போதைய லாக்டவுன் சமயத்தில் இராஜேந்திரனை  மானாமதுரையில்  திடீர் என சந்திக்க முடிந்தது...." எனக்கு சொந்த ஊர் மானாமதுரதே தம்பி. பத்தாவது வரைக்கும் படிச்ச எனக்கு வேலை வாய்ப்புகள் பெரிசா கிடைக்கல. ஆட்டோ ஓட்டி தொழில் செய்யலாம்னு முடிவு செஞ்சு ஆட்டோ ஓட்டினேன். கிடைத்த வேலையை நேர்மையாக செய்தேன். போதுமான வருமானம் கிடைத்தது. ஓரளவு நல்ல நிலைக்கு வந்த பின் ஆட்டோவோடு ஒரு காரும் வாங்கினேன். மானாமதுரையில் இருந்து அவசரமாக வெளியூர் செல்லும் நபர்கள். மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுதல். வெளிநாடு செல்லும் நபர்களை ஏர்போர்ட்டில் இறக்கிவிட, ஏற்றிவருவது என்று என்னுடைய கார் பணி விரிவு பெற்றது. மானாமதுரையில் பழக்கம் இல்லாத நபர்கள் கூட நண்பர் ஆனார்கள். சந்தோசம், துக்கம் என பயணம் சென்றது. சில நேரங்கள் வெளியூர் செல்லும் போது நிறைய விபத்துக்களை நேரில் கண்டுள்ளேன். விபத்து நடந்தபோது உயிருக்கும் போராடும் நபர்களை யாரும் தூக்க மாட்டாங்க. போலீஸ் கேஸு ஆகிடும், நமக்கு எதுக்கு வம்பு என்று கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

 


 

அப்போது என் மனதிற்கு வேதனையாக இருந்தது. ஏன் நமது மனித சமூகம் இரக்கமற்றதாக உள்ளது என்று மிகவும் யோசித்து  வருத்தம் அடைந்துள்ளேன். நாமும் அப்படி இருக்கக்கூடாது,  ஏதாவது செய்யனும் என்று நினைத்தேன். அதற்கு பின்பு தான் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடலாம் என்று இந்த துறைக்கு வந்தேன். தொழிலில் இறங்க பயந்தேன் இருந்தாலும் ஆண்டவன் மேல பாரத்தப்போட்டுத்தான் ஆம்புலன்ஸ் துறைக்கு வந்தேன். மானாமதுரை சுற்றியுள்ள  30.கி.மீ., தூரத்துற்கு எங்கு விபத்து நடந்தாலும் சென்றுவிடுவேன். விபத்து நடந்த இடத்தில் இருந்து அரசு மருத்துவமனை இலவசமாக கொண்டு செல்வேன். அதற்கு பின் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டால் சொல்லும் இடத்திற்கு கொண்டு சென்ற பின் பணம் பெற்றுக்கொள்வேன்.

 


மேலும் ஆதரவற்ற நபர்களின் உடலை அடக்கம் செய்வோம். ஆம்புலன்ஸ் தேவைக்கு ஆதரவற்றோர், ஊனமுற்றோர் உள்ளிட்டோருக்கு பாதிகட்டணம் மட்டும் வாங்கிக் கொள்வேன். 108 ஆம்புலன்ஸ் க்கு போன் செய்கிறார்களோ இல்லயோ நிறையபேர் எனக்கு தான் கால்பன்னுவாங்கி. அவசரத்திற்கு விரைவாக போய் நின்றுவிடுவேன். விபத்து நடந்த நபர்களை மருத்துவமனையில் சேர்ப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் நிலையையும் விசாரித்துக்கொள்வேன். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவு யாரும் இல்லை என்றால் என்னால் முடிந்த உதவியை செய்வேன். கூடுதல் உதவி தேவைப்பட்டால் நண்பர்கள் சுற்றுலா வேன் டிரைவர்கள் மற்றும் ஓட்டுநர் துறை சார்ந்த நண்பர்களிடம் சிறிய சிறிய உதவிகள் பெற்று பாதிக்கப்பட்ட நபர்களிடம் சேர்ப்பேன். ஆட்டோவும்,  ஆம்புலன்ஸ்சும் தான் எனக்கு முக்கிய தொழில். பல இரத்த வெள்ளத்தையும், உயிர் இழப்பையும் கண்டுவிட்டேன். 

 

ஆம்புலன்ஸ் சேவையில் 9 ஆண்டுகளாக பயணிக்கிறேன். 3 ஆம்புலன்ஸ் தற்போது சொந்தமாக என்னிடம் உள்ளது. ஆம்புலன்ஸ் எனக்கு தொழில் என்றாலும் அதிலும் சேவை இருக்க வேண்டும் என உதவிகள் செய்கிறேன். ஆம்புலன்ஸ் தொழில் இருந்தாலும் ஆட்டோ தான் எனக்கு முதற்படி அதனால் ஆட்டோ ஓட்டுநராகவும் அவ்வப்போது சவாரி செல்கிறேன். ஆட்டோ ஓட்டுநராக 22 ஆண்டுகளாக இருக்கிறேன்.

 


ஓட்டுநர் ராஜேந்திரன்


 


மானாமதுரை ஆர்.ஆர்., ஆம்புலன்ஸ் என்றால் பலருக்கும் தெரியும். இராஜேந்திரன் என்ற என் பெயரில் வரும் முதல் எழுத்தையும் இராஜேஸ்வரி என்று முதல் எழுத்துவரும் என் மனைவியின் பெயரையும் இணைத்து ஆர்.ஆர்., ஆம்புலன்ஸ் என்று வைத்துள்ளேன். தொழிலை நேர்மையாக பார்ப்பது வெற்றியை தருகிறது. தொழிலை தொழிலாக மட்டும் பார்க்காமல் சேவையாக பார்க்கிறேன் அது மன நிம்மதியை தருகிறது. பெரிய அளவு உதவி செய்ததில்லை ஆதரவற்றவர்கள், ஊனமுற்றோர், பணம் இல்லாதவர்களிடம் குறைந்த அளவு பணம் வாங்கிக்கொள்வேன் அல்லது இலவசமாக சேவை செய்துகொள்ளவேன். மித்தபடி எல்லா நபர்களிடம் நியாயமான பணம் பெற்றுக்கொள்வேன் அவ்வளவு தான். சில வருடங்களுக்கு முன் மானாமதுரை பகுதியில் இருசக்கர வாகனவிபத்து ஏற்பட்டது. முதியவர் ஓட்டி வந்த வாகனத்தில் 3 குழந்தைகள் பயணித்துள்ளனர். அப்போது விபத்து ஏற்பட்டது இரண்டு குழந்தைகளின் கால்கள் பலத்த அடிபட்டு சேதமடைந்து. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முயற்சி எடுத்து விரைவாக ஆம்புலன்ஸில் கொண்டு சென்றோம். இரண்டு குழந்தைகளின் கால்கள் அடிபட்டதில் கால்கள் சரிசெய்ய சிரமம் என்று தெரியவந்தது.

 

 


 

அதற்கு பின் எனது நண்பர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று பணம் திரட்டி எங்களால் முடிந்த 45 ஆயிரம் ரூபாயை தலா இரண்டு குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கினோம். கிட்டத்தட்ட மொத்தம் 1 லட்ச ரூபாய் பணம் இரண்டு குடும்பத்திற்கு பெரிய அளவு உதவி செய்துவிடாது என்றாலும் அந்த சமயத்தில் அவர்களுக்கு தோள் கொடுத்ததுபோல் இருக்கும் என்ற எண்ணத்தோடு எங்களால் முடிந்த உதவியை செய்தோம். இப்படி பல்வேறு இடங்களில் சிறிய உதவிகள் செய்து வருகிறோம். தொடர்ந்து என்னால் முடிந்த உதவியை செய்வேன். ஆட்டோ ஓட்ரமோ, ஆம்புலன்ஸ் ஓட்ரமோ உதவி என்பது பொதுவானது அதை எல்லோரும் செய்யலாம்" என்றார் உற்சாகத்துடன்.

 

'காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்,

ஞாலத்தின் மாணப் பெரிது'என்ற குறலின் கூற்றுப் படி ஆம்புலன்ஸ் டிரைவர் இராஜேந்திரன் சிறிய உதவியாக இருந்தாலும் அவசர காலகட்டத்தில் உதவி தேவைப்படும் நபர்களுக்கு செய்யப்படும் பல உதவி உலகைவிட பெரியதுதான்.