முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார், மின்இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன.



பாதயாத்திரை பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஆகியோர் மேற்கண்ட படிப்பாதைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். மற்ற பக்தர்கள் ரோப்கார், மின்இழுவை ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது.



இந்த ரோப்கார் செயல்பாட்டுக்காக அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவில் பகுதியில் ரோப்கார் நிலையம் உள்ளது. ரோப்காரில் பயணிக்க, காத்திருந்து செல்பவர்களுக்கு  15 ரூபாயும், முன்னுரிமை அடிப்படையில் செல்பவர்களுக்கு  50 ரூபாயும் என இருமுறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்காரில் 15 ரூபாய் கட்டண முறை நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து  50 ரூபாய் கட்டண சேவை மட்டுமே தொடர்ந்து வருகிறது.


தற்போது நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பழனி முருகன் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதில் ரோப்கார் வழியே செல்லும் பக்தர்களிடம் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் ரோப்கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை கொண்டுவர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில்  ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பக்தர்களும் பழனி ரோப்காரில் பயணிக்கும் வகையில் 15 ரூபாய் கட்டண முறை இருந்தது. ஆனால் தற்போது 50 ரூபாய் கட்டண முறை மட்டுமே உள்ளதால் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒருவர் 10 பேர்கொண்ட குடும்பத்துடன் வரும்போது ரோப்காரில் சென்றுவர 500 ரூபாய் செலவாகிறது. ஆனால் 5 கட்டண சேவை இருந்தால் 150 ரூபாய் மட்டுமே செலவு ஆகியிருக்கும். அதாவது 3 மடங்கு பணம் விரயமாகிறது. எனவே மீண்டும் ரோப்கார் சேவையில் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் தமிழகத்தில் பழனி முருகன் கோவிலில் மட்டுமே ரோப்கார் சேவை உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகியவை சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. ஆனால் தற்போது ரோப்காரில் 15 ரூபாய் கட்டண முறை ரத்தானது கவலை அளிக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே ரோப்காரில் பயணம் செய்யும் நிலை உள்ளது. ஏழை பக்தர்களுக்கு ரோப்கார் சேவை எட்டாக்கனியாக மாறியுள்ளது. எனவே மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை கொண்டுவர அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண