திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவருக்கு திருமணமாகி சுபாஷினி (29) என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். செல்வராஜ் நிதி நிறுவனம் நடத்தி வந்ததுடன், கொத்தனார் வேலையும் செய்து வந்தார். மேலும் குருக்களையம்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயமும் செய்து வந்தார். செல்வராஜின் தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் சவுந்திரம் (70), தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். செல்வராஜ் ஊருக்குள் உள்ள மற்றொரு வீட்டில் மனைவி, மகனுடன் வசித்து வந்தார். மேலும் அவர் அவ்வப்போது இரவில் தோட்டத்து வீட்டிற்கு சென்று தூங்குவது வழக்கம். அதன்படி செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு தோட்டத்து வீட்டிற்கு சென்று, அங்குள்ள மாட்டுக்கொட்டகையில் கட்டிலில் படுத்து தூங்கினார். அவரது தாய் சவுந்திரம் அருகில் மற்றொரு கட்டிலில் படுத்திருந்தார்.





இந்தநிலையில் நள்ளிரவில் செல்வராஜின் தோட்டத்து வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் புகுந்தனர். அப்போது அவர்கள், அங்கு மாட்டு கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்த செல்வராஜ் மற்றும் அவரது தாய் சவுந்திரம் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் செல்வராஜூவும், சவுந்திரமும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.  இதற்கிடையே நேற்று அதிகாலை மாடுகளில் பால் கறப்பதற்காக அதே ஊரை சேர்ந்த பால்காரர் சக்தி செல்வராஜின் தோட்டத்திற்கு வந்தார். அப்போது தோட்டத்தின் நுழைவு வாயிலில் நின்றபடி, சத்தம் போட்டு சவுந்திரத்தை கூப்பிட்டார். ஆனால் நீண்ட நேரமாக அவர் சத்தம் எழுப்பியும் யாரும் வரவில்லை.


இதனால் அவர் தோட்டத்தின் நுழைவு வாயில் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மாட்டு கொட்டகையில் சவுந்திரமும், அவரது மகன் செல்வராஜூவும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக்தி, பதறியபடி குருக்களையம்பட்டி ஊருக்குள் சென்று தாய்-மகன் கொலை குறித்து கூறினார். இதையடுத்து அந்த ஊரை சேர்ந்தவர்கள் எரியோடு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.


commercial use Gas cylinder: சிலிண்டர் விலை 268.50 ரூபாய் உயர்வு..! 2400ஐ தாண்டிய விலை! அதிர்ச்சியில் வணிகர்கள்!!




அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அதேபோல் தாய்-மகன் கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்ததும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், வேடசந்தூர் காவல் துணைகண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோரும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்குள்ளவர்களிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.  மேலும் போலீஸ் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று, எரியோடு-கோவிலூர் சாலையில் நின்றது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதேபோல் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து, தடயங்களை சேகரித்தனர். கொலை நடந்த இடத்தில் எந்த ஆயுதமும் சிக்கவில்லை.





இதையடுத்து கொலை செய்யப்பட்ட செல்வராஜ், சவுந்திரம் ஆகியோரின் உடலை எரியோடு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசாரும் விசாரணையை முடுக்கிவிட்டனர்.


அப்போது சந்தேகத்தின்பேரில் செல்வராஜின் மனைவி சுபாஷினியிடம் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், செல்வராஜின் மனைவியே இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இதுகுறித்து போலிசார் தரப்பில் கூறப்பட்டதாவது, சுபாஷினிக்கும், அவரது உறவினரான ஒத்தப்பட்டியை சேர்ந்த கோபிகிருஷ்ணன் (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கோபிகிருஷ்ணன் நிதி நிறுவனம் நடத்தி வருவதுடன், பால் வியாபாரமும் செய்து வருகிறார். அவர்களுக்கு இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருவானது. இதைத்தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். ஆனால் அவர்களது கள்ளக்காதலுக்கு செல்வராஜ் இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்ய 2 பேரும் திட்டமிட்டனர். மேலும் கோபிகிருஷ்ணன், செல்வராஜை கொலை செய்தால் அவரது நிதி நிறுவனத்தின் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றும் திட்டமிட்டார்.


இதையடுத்து கோபிகிருஷ்ணன், தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் செல்வராஜ் தோட்டத்து வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த செல்வராஜையும், அவரது தாயையும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் சுபாஷினி சிக்கினார். மேலும் ஒத்தப்பட்டியில் பதுங்கியிருந்த கோபிகிருஷ்ணன், அவரது நண்பர் ஆனந்த் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கோபிகிருஷ்ணனின் நண்பர்கள் மேலும் 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.  கொலை சம்பவம் நடந்த ஒரேநாளில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் துறை அதிகாரிகள் பாராட்டினர்.  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனை ஏவி கணவனையும், மாமியாரையும் மனைவியே கொலை செய்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


யூடியூப்பில் வீடியோக்களை காண