முல்லை பெரியாறு அணையின் நிலவரம் குறித்து தேவையற்ற அரசியல் பேச்சுக்களை தமிழகம், கேரளா தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர் .


தமிழகத்தில் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை ,ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை கேரளாவிற்கு அனுமதி இல்லாமல் திறந்து விடுவதாக கேரளாவைச் சேர்ந்த சில அமைப்புகளும் , சில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து புகார் எழுப்பி வந்த நிலையில், அதற்கான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கேரளா சார்பாக இடைக்கால் மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன்பு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக எந்த ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்றாலும் அணையின் நீர் மேலாண்மை மற்றும் நீர் திறப்பு குறித்து கண்காணிக்கும் மேற்பார்வை குழுதான் இறுதி முடிவு எடுக்கவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.




கேரளாவிற்குள் அனுமதியில்லாமல் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டதற்கு விசாரணை அமைக்க தொடுக்கப்பட்ட இடைக்கால மனு மீதான இன்று நடந்த விசாரணையில் நீதிபதி கல்வின்கர் தலைமையிலான விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் சார்பாக முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு அமைக்கப்பட்டு உள்ளது எனவும், முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமான எந்த ஒரு முடிவையும் மேற்பார்வை குழுதான் எடுக்க முடியும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி அறிவுரை கூறியுள்ளார். மேலும் இரு மாநில அரசுகளும் இந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து அடிக்கடி நீதிமன்றங்களை நாட வேண்டாமெனவும் அணை சம்பந்தப்பட்ட பிரச்சினையை மேற்பார்வை குழுவிடம் முறையாக முறையீடு செய்து அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளனர்.




முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்குள் நீர் திறப்பதற்கு முன்பு 24 மணிநேரத்திற்கு முன்பாகவே அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இது போன்ற மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு நீதிபதிகள் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அணைகள் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே அணை மேற்பார்வை குழு நியமிக்கப்பட்ட பிண்பும் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர் நீதிபதிகள்.


அணை சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி மாநில அரசுகளும் இந்த மேற்பார்வை குழுவிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் இரு மாநில அரசுகளுக்கும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். மேலும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குகள் ஏதும் புதிதாக தொடங்கப்பட வேண்டாம் எனவும் இது குறித்த மனுக்களை ஏதும் இனிமேலும் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.




அதேபோல முல்லைப் பெரியாறு அணை மீதான புகார்களும் சரி எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் தனி நபரோ அல்லது அரசு சார்ந்த எந்த ஒரு மனுவோ அணையின் மேற்பார்வை குழுவிடம் முறையீடு செய்து அவர்கள் கொடுக்கப்படும் தீர்வையே முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறினர். மேலும் இந்த அணை மீது புகார் அல்லது ஏதேனும் மனுக்கள் மேற்பார்வை குழு இடம் கிடைத்தால் உரிய கால நேரத்திற்குள் அதற்கான தீர்வை எடுத்துரைத்து அதற்கான முடிவை எடுக்க வேண்டும் எனவும் மேற்பார்வை குழுவிற்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  


மேலும் முல்லைப் பெரியாறு அணை சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களும் வரும் ஜனவரி 11ஆம் தேதி விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண