முழு முதல் கடவுளாக விளங்குபவர் விநாயகர். இவர் அவதரித்த தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி கடைப்பிடிக்கப்படுகிறது. மிக எளிமையாக எல்லா இடத்திலும் அமர்ந்திருக்கும் தெய்வமாகவும், எளியோருக்கு இனியவராகத் திகழ்பவர் நம் விநாயகர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. வீடுகளில் மட்டுமல்லாமல், பொது இடங்களில் பலரும் கூடி பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதை நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள்  அதாவது வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூஜை பொருட்களின் விலையும் மலர்களின் விலையும் உயர்ந்துள்ளது. சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது.




தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிக முக்கியமானவை. இந்த மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில்கூட அதிகமாக இருந்தது. அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள  மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.


 



இச்சந்தையில் இருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட், சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களுக்கும் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் டன் கணக்கிலான மலர்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த மலர் சந்தையில் இருந்து விமானம் மூலம் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த சூழலில் மதுரை, திண்டுக்கல் பூ மார்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இயல்பாக ரூ.300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ இன்று 1600 முதல் 1800 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது. ரூ.50 - 60 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி இன்று 200 ரூபாய்க்கும், ரூ.250 - 300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி, முல்லை பூக்கள் இன்று 900 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்படும் பட்டன் ரோஸ் இன்று 250 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்படும் அரளி இன்று 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.