சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை முடிக்க இறுதியாக 4 மாத கூடுதல் கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி செல்வராணி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள்  முடிக்க உத்தரவிட்டிருந்தது. 


இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே, வழக்கு விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என மதுரை விசாரனை  நீதிமன்றம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 5 மாத கால கூடுதல் அவகாச வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட நீதிமன்றம் தரப்பில்,"105 சாட்சிகளில் 55 முதல் 60 சாட்சிகளே முக்கியமானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வாரத்திற்கு 2 நாட்கள் வழக்கு கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. குற்றவாளிகளாக கருத்தப்படும் 9 நபர்களின் வழக்கறிஞர்களும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதால், காலதாமதம் ஏற்படுகிறது. எனவே 4 மாத கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதி, இறுதியாக 4 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.