பாமக கட்சியை சேர்ந்த ராமலிங்கம் படுகொலை வழக்கில் திண்டுக்கல் உட்பட தொடர்புடைய 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், திண்டுக்கல் ஷேக் அப்துல்லா வீட்டில் செல்போன் மற்றும் உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்தனர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர் பாத்திர கடை தொழில் செய்து வருகிறார். 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் . இந்த கொலைக்கான முக்கிய காரணம் மதம் மாற்றம் செய்வதை ராமலிங்கம் கண்டித்ததாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தான் அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதை அடுத்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த கொலை வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டு 10 நபர்கள் கைதான நிலையில், 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். இந்த விசாரணையானது நடைபெற்று கொண்டு வரும் சூழ்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் பதுங்கி இருந்த முகமது அலி என்பவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. இந்த நிலையில் இன்று திண்டுக்கல் பேகம்பூர் பகுதி ஜின்னா நகரில் வசித்து வரும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் ஆன ஷேக் அப்துல்லா என்பவரது இல்லத்தில் காலை 6:00 மணி முதல் 3 தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்துவரும் நிலையில்,
இதேபோல் ஒட்டன்சத்திரம் யூசுப் என்பவரது இல்லத்திலும் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரது இல்லத்திலும் கொடைக்கானல் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். திண்டுக்கல் ஷேக் அப்துல்லா வீட்டில் நடைபெற்ற சோதனை தற்போது முடிவடைந்த நிலையில் ஷேக் அப்துல்லாவின் எஸ் டி பி ஐ அடையாள உறுப்பினர் அட்டை மற்றும் அவரது கைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 25ஆம் தேதி சென்னை அலுவலகத்தில் ஆஜராகும்படி கையொப்பம் வாங்கியுள்ளனர்.