ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு வருடம் தோறும் தேசிய அளவில் "அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்" என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விருதுக்காக இந்திய அளவில் 100 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தெற்கு ரயில்வே அளவில் 6 ரயில்வே ஊழியர்கள் 3 ரயில்வே அதிகாரிகள் தேசிய விருது பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மதுரை கோட்டத்தில் உள்ள மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளராக கே.வீரப்பெருமாள் பணியாற்றி வருகிறார்.




இவர் ரயில் பாதை கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது ரயில் பாதையில் பற்றவைப்பு விரிசல் இருப்பதைக் கண்டார். இந்த பாதையில் சென்னை - தஞ்சாவூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரம் என்பதை அறிந்து உடனடியாக ரயில் பாதையின் எதிர்ப்புறம் ஓடி சிவப்பு கொடியை காட்டி விரைந்து வரும் ரயிலை நிறுத்தினார். இதன் மூலம் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சமயோசித செயலை பாராட்டி இவருக்கு தேசிய விருதான "அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்"  வழங்கப்பட இருக்கிறது.




இதே போல சென்னையில் பணியாற்றி வரும் மதுரை கோட்டத்தை சேர்ந்த பயண சீட்டு பரிசோதகர் டி.செல்வகுமார் போலி ஆதார் கார்டுகளை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டில் பெயர் மாற்றம் செய்வது மற்றும் முதியோர் இட ஒதுக்கீடை தவறாக பயன்படுத்துவது போன்றவற்றை கண்டறிந்து கடும் அபராதம் விதித்துள்ளார். ஆகவே இவருக்கும் தேசிய விருது வழங்கப்பட இருக்கிறது.  நடு ரயில் பாதையில் நின்ற யானையை காப்பாற்ற விரைந்து ஓடும் ரயிலை நிறுத்திய ரயில் ஓட்டுநர் ஈரோடு எம். கே. சுதீஷ்குமார், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திய சென்னை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் தேசிடி மதுசூதன் ரெட்டி, எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் முகப்பை பழைய கால நீராவி என்ஜின் போல மாற்றிய ஆவடி பகுதி பொறியாளர் ஏ. செல்வராஜா, இதய நோயாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்த பெரம்பூர் ரயில்வே மருத்துவ செவிலிய கண்காணிப்பாளர் துர்கா தேவி விஜயகுமார், முதல் பாரத் கவுரவ் ரயில் இயக்க உறுதுணையாக இருந்த சேலம் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் இ.ஹரி கிருஷ்ணன், சென்னை பகுதியில் ரயில்களை அதிவேகத்தில் இயக்க ரயில் பாதையை பலப்படுத்த உறுதுணையாக இருந்த சென்னை கோட்ட முது நிலை பொறியாளர் எஸ்.மயிலேறி, சிக்னல் குறைபாடுகளை தவிர்க்க உறுதுணையாக இருந்த உதவி தொலைத்தொடர்பு பொறியாளர் எஸ்.மாரியப்பன் ஆகியோருக்கும் தேசிய விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த ரயில்வே அமைச்சர் அளவிலான தேசிய விருதுகளை வருகிற வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்க இருக்கிறார்.