முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டிட பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ளது. கட்டிடத்திற்கு 99 கோடி ரூபாயும், புத்தகம் வாங்க 10 கோடி ரூபாயும், கணினி வாங்க 5 கோடி ரூபாயும் என மொத்தம் 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.


 






 



அடித்தளத்தில் வாகன நிறுத்தத்துமிடமும்; தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும்; முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை பல்வேறு வகையான நூல்களுக்கான பிரிவுகளும் அமையவுள்ளன. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை போல பிரம்மாண்டமாக அமையும் இந்த நூலகம் தென் தமிழகம் முழுமைக்கும் பயனுள்ள வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் நபர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்டோருக்கு பேருதவியாக இருக்கும்.


 


















 












இந்நிலையில்  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு கலைஞர் நூலக கட்டுமான பணிகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார்.  இந்தக் கலைஞர் நினைவு நூலகத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் வாங்க முடிவு செய்யபட்டுள்ளது, நூலகத்தில் வைக்க உள்ள புத்தகங்களை தேர்வு செய்வதற்கு மூத்த கல்வியாளர்கள் மற்றும் பொது நூலக அதிகாரிகள் தலைமையில் நிபுணர் குழு அமைக்கபட்டுள்ளது. மேலும் நிபுணர் குழு தேர்வு செய்து வழங்கும் பட்டியலின் அடிப்படையில் புத்தகங்களை வாங்க ஒப்பந்த பள்ளி வெளியிடப்படும். வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் கலைஞர் நினைவு நூலக பணிகள் 100% நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண