உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கார்த்திகை உற்சவ கொடியேற்றம் நேற்று சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியின்போது சுந்தரேசுவரர்- மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். 

 




 


 

கொடியேற்ற நிகழ்வையொட்டி கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க தீபாராதனை அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். இதனைத்தொடர்ந்து கொடிமரத்தில் கார்த்திகை தீப திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோயில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருள்வர்.

 




 


 

10 நாட்கள் நடைபெரும் இந்த உற்சவத்தில் வரும் 19 ஆம் தேதி தீபதிருநாளை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம், அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பொற்றாமரைக்குளம், அம்மன், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல் விளக்குகள் மூலம் லட்சதீபங்களை ஏற்ற உள்ளனர். தொடர்ந்து சித்திரை வீதியில் இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும், உபய தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேங்கள் எதுவும் நடைபெறாது என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.