தவறான அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதற்கு இழப்பீடு கோரி நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை நீக்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

 

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் சண்முகம், உயர் நீதிமன்ற கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ''சங்கரன்கோவில் இலந்தைகுளத்தைச் சேர்ந்த முருகன் என்ற முகமது அப்துல்லா வயிற்று வலிக்காக கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவருக்கு  வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையில் தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது மனைவி சகிலால் பானு 50 லட்சம் இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தை நாடவும், தவறு செய்த மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சில் தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து முகமது அப்துல்லாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 50 லட்சம் இழப்பீடு கேட்டு சகிலால்பானு வழக்கு தொடர்ந்து, அதில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் சேர்த்துள்ளார். விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒரு ஆண்டு தொழில் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இழப்பீட்டு வழக்கில் மருத்துவ கவுன்சிலை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்.'' என கூறியிருந்தார்.

 

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இழப்பீட்டு வழக்கில் மருத்துவ கவுன்சிலை நீக்கி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

 



ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு 


ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவும், தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை ஒத்திவைத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.


தேனி மாவட்டம், உத்தமபாளையம் சேர்ந்த பி.கே.பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  "சத்தியசீலன் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் பெயரிலும், இவரது மனைவி பெயரிலும் மற்றும் பினாமி பெயரிலும் பல சொத்துக்கள் இருந்து வருகிறது.

 

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 50 சென்ட் இடம் வாங்கியுள்ளார். இதற்காக, துணைப் பதிவாளரை மிரட்டி ரூபாய் 2 லட்சம்  மதிப்பிலான இடத்தை ரூபாய் 1,34,000 என வாங்கி பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டு உயர்மட்ட குழு விசாரணை செய்தது. ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தற்போது காவல்துறையினர் என்னை மிரட்டி வருகின்றனர்.

 

எனவே, எனக்கும், எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கியும், சத்திய சீலன் ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.