கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும்.






 

மார்கழி மாதத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன்   படி அளக்கும் விதத்தை  குறிக்கும் நிகழ்ச்சியாக கருதப்படும்  மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில்  சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான 'அஷ்டமி சப்பரம்' என்னும் தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும், அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவது வழக்கம். இந்நிகழ்ச்சி இன்று அதிகாலை 5.30 மணிக்கு  கோயிலில் இருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு மாசி வீதியில் வலம் வந்து அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள்  கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வந்தனர் அம்மன் சப்பரத்தை பெண்கள்  இழுப்பது தனிச்சிறப்பாகும்.



நான்கு மாசி வீதிகளிலிம் வலம் வந்த சப்பரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்,மேலும் கீழே சிதறி கிடந்த அரிசியை கூடியிருந்த பக்தர்கள் எடுத்து கொண்டு வீடுகளில் சென்றனர் . திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள உணவு கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்ற நம்பிக்கையையும் உள்ளது.

 



இது குறித்து மதுரை சேர்ந்த பக்தர்கள்...,”  மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை எடுத்துரைக்கும் வகையிலான அஷ்டமி சப்பர திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும்.  கோயிலிருந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும் அம்மனுக்கும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில்  சுந்தரேசுவரர் - பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் தேர்களில் எழுந்தருளி கோவிலை சுற்றியுள்ள வெளிவீதிகளில் வலம்வருகின்றனர்.  தேரானது கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடையும். இதில் அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து செல்வது  தனிச்சிறப்பாகும்.  தேர் வீதிகளில் உலாவரும் போது  இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள்.  பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை” என்றார்.



மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைதிருவிழா தேரோட்டத்தை போல   அஷ்டமி சப்பர தேரோட்டமும் மிகவும் பிரசிதிபெற்றது என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் நின்றபடி சிவசிவ என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

.