சுற்றுச்சூழல் அமைப்பிலும், மனித வாழ்க்கை முறையிலும் ஏற்படுத்தி இருக்கும் இறுக்கத்தினை தளர்த்துவது போல அறிவியலில் பல்வேறு சீரிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளில் ஒன்று ப்ளாஸ்டிக் பொருட்களின் மக்கும் தன்மையின் கால அளவை குறைப்பதற்கான முயற்சி. பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் விஞ்ஞான அமைப்புகளும் பலதரப்பட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வபோது முன்னேற்றம் குறித்த தகவல்கள் வந்த வண்ணமிருந்தாலும் காத்திரமான பயன்பாட்டுக்கானதாக இல்லாமல் முயற்சியின் முன்னேற்றமாக பார்க்கப்பட்டு வருகிறது. 






தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க, மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அறிமுகம் செய்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. நல்ல முன்னெடுப்பு என பலரும் அதை பாராட்டி வருகின்றனர். உண்மை தான், வருங்கால நம் சந்ததியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அதற்காகவாவது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மஞ்சப்பையை கையில் எடுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

 



 

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக்குமார் குடுகுடுப்பைக் காரர் வேடமிட்டு மதுரை உழவர்சந்தை பகுதியில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பிளாஸ்டிக் கவர்கள் கொண்டுவரும் நபர்களிடம் துணிபை கொடுத்த, அடுத்த முறை மஞ்சள் பை கொண்டு வாருங்கள் என கேட்டுக்கொண்டார்.



 

இது குறித்து அசோக்குமாரியம் பேசினோம்..,” நெகிழி பைகளை தவிர்த்து துணிபைகளை பயன்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு பசுமையான இயற்கை பொங்கும் பூமியினை வழங்கிடுவோம். என்ற நல் நோக்கத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குடுகுடுப்புக்காரர் வேடமிட்டு தமிழகத்தில் முதன் முதலில்  துவங்கப்பட்ட மதுரை உழவர்சந்தையில் நெகிழிபைகளில் காய்கறிகள் வாங்கும் பொதுமக்களிடம் நெகிழிபையை பெற்றுக்கொண்டு இலவசமாக துணிபை வழங்கினேன். விவசாய பெருமக்களிடம் தங்கள் அங்காடிக்கு வரும் நுகர்வோரை துணிப்பை கொண்டு வரும்படி எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டேன். உழவர் சந்தையில் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நேரடி தொடர்பு ஏற்படும். அதனால் அங்கிருந்து என்னுடைய விழிப்புணர்வை துவக்கியுள்ளேன். தொடர்ந்து துணிப்பை குறித்த விழிப்புணர்வை மதுரை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்” என்றார்