மதுரை பாண்டிகோயிலில் அறக்கட்டளை அலுவலகத்தில் நுழைந்து கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தட்டுப்பணம் 3 லட்ச ரூபாய் திருடப்பட்டது. இது தொடர்பாக செல்லப்பாண்டி பூசாரி, மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் லட்சம் என்ற லெட்சுமி, ரெபெல்லோ, ராஜேஷ்பாண்டி, பாண்டியராஜன், ரிஷிபாண்டியன் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 5 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. 


அப்போது நீதிபதி, பாண்டிகோயில் தொடர்பாக இரு தரப்பு இடையே பிரச்சினை உள்ளது. உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றம் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ரெபெல்லோவும் அவரது முறை வந்த போது பூசாரியாக இருந்துள்ளார். அப்போது தட்டில் விழுந்த பணம்தான் அந்தப்பணம் என்று கூறியுள்ளார். இதனால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது.


ரெபெல்லா 2 வாரத்தில் மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் 3 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். பின்னர் கீழமை நீதிமன்றத்தில் உரிய உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெறலாம். மனுதாரர்கள் ஒரு மாதத்துக்கு தினமும் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பின்னர் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. தலைமறைவாகக் கூடாது. நிபந்தனைகளை மீறினால் கீழமை நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கலாம்" என உத்தரவிட்டுள்ளார்.




கோயில்  கிரிவலப்பாதையில் புதிதாக அமைய உள்ள அரசின் மதுபான கடைக்கு தடை விதிக்க கோரி வழக்கு முடித்து வைப்பு

 

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த வக்கீல் அறிவழகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், துறையூர் தாலுகா சொரத்தூர் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுகடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. கோயிலின் கிரிவலப்பாதையில் தேர்வரும் காலங்களில் மண்டகப்படி அமைத்து வழிபாடு நடத்துகிறோம். இந்தப் பகுதியில் பள்ளிவாசலும் அமைந்துள்ளது. கிரிவலப்பாதையின் 500 மீ தொலைவிற்குள் டாஸ்மாக் கடை அமையவுள்ளது. எனவே, இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் ஆகியோர் பொது நல மனுவை வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளதால் மனுவில் தலையிட இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. எனவே, இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.