’மொட்டுக் காளான், சிப்பிக் காளான், நாட்டுக் காளான், பால் காளான், அரிசிக் காளான் என இந்தியாவில் மட்டும் 2  ஆயிரத்திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. உலகம் முழுதும் மொத்தம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான காளான் வகைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியான காளான் வகையில் குறிப்பிட்ட வகைகள் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. காளானில் வைட்டமின் பி அதிகமாக இருப்பதாகவும், இதய நோய்க்கு கூட மருந்தாக பயன்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். போலிக் அமிலம் அதிகளவு இருப்பதால் ரத்த சோகைக்கும் நல்லது. கண்பார்வை, எலும்பு வலுபெறுதல், பற்கள் உருதி தன்மைக்கு தேவையான தாமிரம், இரும்பு, சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காளான் உற்பத்தி தற்போதைய காலகட்டத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.



இந்நிலையில் மதுரை பாத்திமா மகளிர் கல்லூரி சார்பாக காளான் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.  இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமபுற பெண்களும் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இது குறித்து வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் பரமேஸ்வரி நம்மிடம்....," 'Fatima incubation entrepreneurial skill training and animation of fatima college' - சார்பாக இரண்டு நாள் காளான் வளர்ச்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் எங்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் மேலும் சில கல்லூரி மாணவிகளும் கிராமபுற பெண்களும் பயிற்சி எடுத்துக் கொண்டனர்.



 

காளான் வளர்ப்பிற்கு தேவையான சூழல், காளான் வளர்ப்பு முறை, காளான் பாதுகாப்பு, அறுவடை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை பற்றி முழு காளான் பராமரிப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பாத்திமா கல்லூரி விலங்கியல் துறை சார்ந்த உதவி பேராசிரியர் தெல்மா, இந்த காளான் வளர்ப்பு பயிற்சியினை அளித்தார் மற்றும் முனைவர். கலைச்செல்வி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் இந்த பயிற்சி வகுப்பினை ஒருங்கிணைத்தார்" என தெரிவித்தார்.

 

இது குறித்து பயிற்சி மேற்கொண்ட கிராம பெண்கள்..,” விவசாயம், விவசாயம் சேர்ந்த உபதொழில்களை எளிமையாக மேற்கொள்ள முடியும். ஏனெனில் வீட்டில் இருந்து கொண்டே இவற்றை செய்ய முடியும். அதே சமயம் நம் வீட்டையும் முறையாக கவனித்துக் கொள்ள முடியும். காளான் பயிற்சி வகுப்பு மிகவும் பயனாக இருந்தது. இங்கு கற்றுக் கொண்ட பயிற்சியின் அடிப்படையில் சிறிய அளவில் காளான் வளார்ப்பு ஆரம்பிக்க உள்ளோம். தொடர்ந்து அதில் கிடைக்கும் நிறை, குறைகளை எடுத்துக் கொண்டு காளான் உற்பத்தியை விரிவுபடுத்துவோம்.” என்றனர்.